“ஓசி” பஸ் பேச்சு.. சகஜமாக சொன்னேன்! அரசியல் பண்ணிட்டாங்க - “வருத்தம்” தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி
சென்னை: ஓசி பேருந்தில் செல்கிறீர்களா என மகளிரிடம் அமைச்சர் பொன்முடி மேடையில் கேட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவ்வாறு பேசியது யார் மனதையும் புன்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்." என்றார்.

கடும் எதிர்ப்பு
அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அமைச்சர் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்கள் முன்பாக கோவை அரசு பேருந்து ஒன்றில் நடத்துனரிடம் மூதாட்டி ஒருவர் ஓசி டிக்கெட் வேண்டாம் என்று வாக்குவாதம் செய்து கட்டணம் கொடுத்து டிக்கெட் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக நிர்வாகி
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், பாட்டியை அவ்வாறு பேச வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது அதிமுகவை சேர்ந்த பிருத்விராஜ்தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து மதுக்கரை போலீசார் பிருத்விராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது அவதூறு பதிவு செய்தது.

முதலமைச்சர் பேச்சு
இந்த நிலையில் பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பல முனைகளில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மத்தளத்தில் இரு பக்கமும் அடி என்பதைபோல் எனது நிலைமை இருக்கிறது. இந்த சூழலில் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் நான் யாரிடம் சொல்வது?" என்றார்.

பொன்முடி வருத்தம்
பொன்முடியை மனதில் வைத்தே முதலமைச்சர் இவ்வாறு பேசியதாக பலரும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சகஜமாக பேசியதை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்றும், தனது பேச்சால் உண்மையாகவே யாருடைய மனது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications