இந்த முடிவை நீ எடுத்திருக்கக் கூடாது...மர்மதேசம் சீரியல் நடிகர் லோகேஷ் தற்கொலை..நண்பர்கள் சோகம்
சென்னை: மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்திய லோகேஷ் ராஜேந்திரன், திடீரென தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த முடிவை நீ எடுத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் லோகேஷ் ராஜேந்திரனின் நண்பர் சுரேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத சீரியல்கள் என்றால் அது ஜீ பூம் பா மற்றும் மர்மதேசம் ஆகிய தொடர்கள் தான். இன்றளவும் இந்த தொடர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் இன்று சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.

மர்மதேசம்
மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியவர் லோகேஷ். இவர் ஜீ பூம் பா தொடர் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இவருக்கு நடிப்பை விட டைரக்ஷனில் ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார். அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது.

லோகேஷ் ராஜேந்திரன்
சமீபத்தில் மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன. அந்த புகைப்படத்தில் பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டி ராசுவாக நடித்த லோகேஷை பார்த்து. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன லோகேஷ் ராஜேந்திரன் இளைஞனாக வளர்ந்து இருந்தார்.

ரசிகர்கள் பாராட்டுகள்
மர்ம தேசம் தொடரை விடவும் 'ஜீ பூம்பா' சீரியல் சிறுவர்கள் மத்தியில் லோகேஷூக்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தது. இயக்குனர் நாகா அறிவுரையின் பேரில் நடிப்பை விட்டுட்டு இயக்கம், சினிமா சார்ந்த தொழில் நுட்ப வேலைகளில் லோகேஷ் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை இவர் இயக்கிய சில குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை அள்ளி இருந்தன. கூடிய விரைவில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கவும் லோகேஷ் முயற்சி செய்து வந்து இருக்கிறார்.

சினிமாவில் இயக்குநர்
இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ், விரைவில் சினிமாவில் இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் விஜயகாந்த் நடித்த கண்ணுபட போகுதய்யா படத்தில் நடித்துள்ளார். இயக்குனராக வேண்டும் என்ற பெரும் கனவை கொண்ட இவர் ஆறு அத்தியாயம் என்ற ஆந்தாலஜியில் சூப் பாய் சுப்ரமணி என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனராகும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

நண்பர்கள் இரங்கல்
இந்த நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து அவரது நண்பரும் இயக்குநருமான சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், "தற்கொலை எதுக்கும் முடிவல்ல மச்சி ... இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தும் இந்த முடிவு எடுத்திருக்க கூடாதுடா ... மர்ம தேசத்தில் குழந்தையாக தொடங்கிய உன் பயணம் இப்படி முடிந்திருக்க கூடாது.. பெரிய இயக்குநரா ஜெயிச்சிருக்க வேண்டியவன் நீ Miss you machi Lokesh Rajendran ... RIP" என பதிவிட்டுள்ளார்.

போராடியிருக்கலாம்
அதேபோல், ஹரேஷ் நாராயண் என்பவர் , இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்... போர் தெரிந்தவன்தான்.. ஆனால் போதைக்கு இரையாகிவிட்டான். #RIP Lokesh Rajendran " என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்கொலைக்கு காரணம்
அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த லோகேஷின் இந்த திடீர் தற்கொலை முடிவு அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. தற்கொலை தடுப்பு தொடர்பு எண் : 104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் : 044 - 24640050












Click it and Unblock the Notifications