"ஸ்டாலின் சார்.. வயசானாலும் உங்க ஸ்டைலும், அழகும் குறையவேயில்லை.." நெகிழ்ந்து பேசிய ரம்யா.. பூரிப்பு
சென்னை: "வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை.." என்று படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற பஞ்ச் டயலாக் போல முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து போனில் சிலாகித்துக் கூறியுள்ளார் ஒரு பெண்மணி.
Recommended Video
சமூக வலைத் தளம் முழுக்க இந்த வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய அந்த பெண் யார்? அதன் பின்னணி என்ன? ஏதோ விவரம்:

சாலையோரம் வழிமறித்த பெண்
ஆகஸ்ட் 5ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றிருந்தார். அப்போது முதல்வர் சென்ற வாகனத்தை கையை காட்டி மறித்து நிறுத்திய ஒரு பெண், கொஞ்சம் உங்கள் முக கவசத்தை கழற்ற முடியுமா சார்.. நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்க.. ஸ்டாலினும் அவ்வாறே செய்தார். பெரிய பாதுகாப்புடன் கூடிய அந்தஸ்தில் உள்ள முதல்வர் இவ்வாறு சாலையோரம் நின்ற ஒரு பெண்மணி கூறியதை கேட்டு தனது முக கவசத்தை கழட்டியது பெரும் பேசுபொருளாக மாறியது. முன்பு இதுபோல மக்களோடு மக்களாக எளிமையாக சென்று பழகிய முதல்வர்கள் இருந்தார்கள். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அந்த நிலைமை மாறி முதல்வர் என்றால் அவர் எதோ தனித்தீவு போல ஒரு அதிகார மையம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதை உடைத்து எறிந்து ஸ்டாலின் எளிமையாக பழகுகிறார் என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி ரம்யா
ஸ்டாலினுடன் நேருக்கு நேர் பேசிய அந்த பெண் பெயர் ரம்யா. வயது 42. ஸ்டாலினிடம் பேசியபோது, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கான பெயர்தான் ஸ்டாலின் என்று தெரிவித்தார். அதைக்கேட்ட முதல்வரும், நன்றி, என்று கூறி அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதன்பிறகு செய்தியாளர்கள் அந்தப் பெண்ணிடம் பேட்டி எடுத்தனர். அப்போது, முதல்வரை மிக அருகே நின்று பார்த்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் முதல்வரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்து இருக்கிறேன். அதில், எனது பெயர், மொபைல் எண், ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்கிறேன். நிச்சயம் அவர் என்னை தொடர்புகொண்டு பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இன்ப அதிர்ச்சி
இந்த நிலையில்தான், "இன்ப அதிர்ச்சி.." என்று சொல்வார்களே, அப்படி ரம்யாவுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். முதல்வரின் தொலைபேசி அழைப்பு வந்ததும் அதை அருகே நின்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்தோடு, வீடியோவாக பதிவு செய்துள்ளனர். முதலில் முதல்வரிடம் ரம்யா பேசினார்.

சாதிச்சிட்டீங்க சார்
ரம்யா பேசுகையில்.. "அய்யாதான் 11 வருடம் முதல்வராக இருந்திருக்கிறார். அடுத்து நீங்கள் தான் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் .. அதற்கு நீங்கள் நிறைய செய்ய வேண்டும்.. சாலையை நன்கு போட்டு தண்ணீர் இணைப்பு கொடுத்து விட்டால் தமிழ் நாடு எங்கேயோ போய்விடும் சார்.. நீங்கள் மக்களின் முதல்வர் ஆகி விட்டீர்கள்.. இவ்வளவு குறுகிய காலத்தில் உங்களது சாதனையை நினைத்து பார்க்க முடியவில்லை.. உங்கள் அருகே நின்று பேச முடியும் என்று நான் நினைக்கவே இல்லை.." என்று பூரிப்போடு பேசினார் ரம்யா.

அப்பாவுக்கு கான்பரன்ஸ் கால் போட முயற்சி
"நன்றி.." என்று தெரிவித்த ஸ்டாலின், தொலைபேசி உரையாடலை நிறைவு செய்ய முயன்றபோது, "எனது தந்தையிடம் பேச முடியுமா சார்.." என்று ரம்யா கேட்டார். முதல்வரும், "கட்டாயமாக பேசுகிறேன்.." என்று சொல்ல.. தந்தை எனது அருகே இல்லை, கான்பரன்ஸ் கால் போடுகிறேன் பேசுங்கள் என்று அந்தப் பெண் கூறினார். அதற்கு முதல்வர், "நேரடியாக அவரிடம் பேசுகிறேன், இப்போது வேண்டாமே.." என்றார்.

வயசானாலும், உங்க அழகும், ஸ்டைலும் குறையல
"இந்த நம்பருக்கு நான் உங்களை அழைத்தால் மறுபடியும் பேச முடியுமா சார்.." என்று திவ்யா கேட்க, முதல்வர் ஸ்டாலினும், "கண்டிப்பாக பேச முடியும்" என்று பதிலளித்தார். அத்தோடு விடவில்லை ரம்யா.. "சூப்பரா இருக்கீங்க சார்.. எவ்வளவு வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையல சார்.. ஹேட்ஸ்ஆப் சார்.." என்று சொல்லி நெகிழ்ந்தார். அதற்கு புன்முறுவலோடு, "நன்றி.." என்று கூறி விடை பெற ஸ்டாலின் முயன்றபோது, "எனது மகளிடம் பேசுங்கள்" என்று 12ம் வகுப்பு படிக்கும் தனது மகளிடம் போனை கொடுத்தார் ரம்யா.

மகளிடம் பேசிய முதல்வர்
கடுமையான பணிகள் இருந்த போதிலும், அன்புக்கு கட்டுப்பட்டு , ரம்யாவின் மகளிடமும் பேசியுள்ளார் ஸ்டாலின். அந்த சிறுமி, தான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், பள்ளிக்கூடத்தை விரைவில் திறந்து வையுங்கள், இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று ஆதங்கத்தோடு கூறினார்.

பள்ளிகளை திறக்க கோரிக்கை
"கொரோனா நோய் பரவல் இருப்பதால்தான் பள்ளியை திறக்க முடியவில்லை.. ஆன்லைனில் படிக்கிறீர்கள் தானே.." என்று முதல்வர் கேட்க , "ஆமாம் சார்" என்று அந்த சிறுமி பதில் அளித்ததோடு, "ஆன்லைனில் படிக்க கஷ்டமாக இருக்கிறது விரைவில் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.." என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், கொரோனா குறையட்டும், பள்ளிகளை திறக்கலாம் என்று பதில் சொன்னார். அந்த மாணவியும், சார்.. ரொம்ப சூப்பராக இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. என்று கூற, "நன்றி" என்று ஸ்டாலின் புன்முறுவலோடு கூற, அந்த உரையாடல் இனிதே நிறைவடைந்தது. அந்த குடும்பமே குதூகலத்தில் மகிழ்ச்சி அடைந்தது, அவர்களது முகங்களில் எதிரொலித்தது. இந்த வீடியோ தான் தற்போது வைரலாக சுற்றி வருகிறது.

மக்களோடு மக்களாக
சாலையோரம் நின்ற பெண் வழிமறித்தபோது நின்று பேசியதோடு, அந்த பெண் அளித்த பேட்டியை கவனித்து, நேரடியாக அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார் ஸ்டாலின். மக்களோடு ரொம்பவே நெருங்கி பழகுகிறார் முதல்வர் என்று சிலாகிக்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications