என்னுடைய அருமை தங்கை கனிமொழி வெற்றி பெற்றுவிட்டார்! சென்னை சங்கமம் விழாவில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
சென்னை: ''சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி'' என்று சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எப்படி தனக்கு பொழுதுபோனது என்றே தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;
'சபாஷ்’ போட வைத்த 'தமிழ்நாடு' கோலம் உருவானது எப்படி? கனிமொழி சொன்ன 'செம’ பின்னணி!
அருமை தங்கை
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக் கூடியவர் என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. ஒரு திருவிழாவில் எப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவும், குதூகல மனநிலையோடு இருப்பார்களோ அப்படித்தான் நம்முடைய நம்ம ஊரு திருவிழாவிலும் நாம் எல்லோரும் கலந்துகொண்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.
பொழுது போனது தெரியவில்லை
தொடர்ந்து சட்டமன்றம், அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுகள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து பணிகள் இருந்தாலும், இந்த கலை நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு நான் இங்கு வந்து பார்த்து இருக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எப்படிபொழுதுபோனது என்று எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.
சம்மட்டியாய்
திராவிட இயக்கம் தான் ஒரு சமுதாயத்தின் ஒரு தரப்பினருக்கான சாமரவீச்சாய் அல்ல... சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்துக்கு சமாதி கட்ட நினைத்த போக்குக்கு எதிரான சம்மட்டியாய்... மூடப்பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது.
திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது. திராவிட இயக்கம் தான் சாமானிய மக்களின் மொழியில் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது.
''கலைஞர்'' வழியில்
நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி, மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்கள் வாழ்வில் மலர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு. அதனால்தான், இது கலைஞர்களுக்கான அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
மக்கள் தனித்தனியாக
இந்த விழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க இருக்கிறோம். பொதுவாகவே மக்கள் தனித்தனித் தீவுகளாக தங்களை இப்போது மாற்றிக் கொள்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். உண்மையான பொழுதுபோக்கு என்பது நம்முடைய கலைகள்தான். அந்தக் கலைகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், நம் மனதைப் பண்படுத்துவதாகவும் அது அமைந்திருக்கிறது.