கருணாநிதி சிலை திறப்பு.. சோனியாவை நேரில் அழைக்கிறார் ஸ்டாலின்.. நாளை டெல்லி பயணம்
நாளை திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். அங்கு அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.
தமிழக அரசியல் களத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவினை பிரம்மாண்டமாக செய்ய திமுக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அழைப்பிதழ்கள்
விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள், பிரமுகர்களுக்கும் கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தந்தை - மகள்
கருணாநிதியின் இந்த சிலையை காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தி திறந்து வைக்க உள்ளார். கட்சிகளையும் தாண்டி, அரசியலையும் தாண்டி, ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிந்தவர்கள்தான் கருணாநிதியும் - சோனியா காந்தியும். தந்தை - மகள் போல பாசமிகு உறவு கொண்டிருந்தவர்கள். கருணாநிதியின் சிலை திறக்க சோனியா காந்தியை திமுக தலைமை அழைக்க இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
பொருத்தமான ஒன்று
கருணாநிதி கடைசி காலத்தில் மருத்துவமனையில் இருந்தபோதும் சரி, மறைந்தபோதும் சரி சோனியாவால் வர முடியவில்லை. அவருக்கும் உடல்நலக் கோளாறுகள் இருந்து வந்தன. தமிழகத்திற்கு அவர் வந்தும் நீண்ட காலமாகிறது. அதனால் கருணாநிதி சிலை திறக்க சோனியா காந்தி வருவது மிக முக்கியமான ஒன்றாகவும், பொருத்தமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இல்லத்தில் சந்திப்பு
இதற்காகத்தான் ஸ்டாலின், நாளை காலை டெல்லி சென்று சோனியாவை சந்திக்க இருக்கிறார். அதுமட்டும் இல்லை, அன்றைய தினம் சோனியா காந்திக்கு பிறந்த நாள். அதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படும் ஸ்டாலின், அங்கு பகல் 11.30 மணியளவில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
முறைப்படி அழைப்பு
பூங்கொத்து கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பார்.அப்போது, நடக்க உள்ள சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து விழாவிற்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளார். பிறகு அரசியல் நிலவரம் குறித்தும் ஏதாவது சோனியாவுடன் ஸ்டாலின் ஆலோசிப்பார் எனவும் தெரிகிறது.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்துதான் மற்றொரு முக்கிய நிகழ்வாக 10-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் ஸ்டாலினும் கலந்து கொண்டு நிறைய விஷயங்களை ஆலோசிக்க உள்ளார்.
எதிர்பார்ப்புகள்
இந்திய அரசியலையே அசைத்து பார்க்கக்கூடிய வகையில் இந்த ஆலோசனை கூட்டம் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் மிக முக்கியமான ஒன்றாக இருப்பதால் பரபரப்புடன் கூடிய எதிர்ப்பார்ப்புகள் பலமாகவே எழுந்துள்ளன.