கோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரைக்கும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை,பெரியாறு, தேவகோட்டை, தேவாலா, குழித்துறையில் மழை பெய்துள்ளது. சின்னக்கல்லார், வால்பாறை காரைக்குடியில் நேற்று 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
வருகின்ற 31ஆம் தேதி கோயம்புத்தூர் , நீலகிரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், நீலகிரி ,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
இன்று முதல் வருகின்ற இரண்டாம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, வடக்கு வங்க கடல், தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.