தாய்ப்பால்.. இதற்காக தற்கொலையா.. பதறிப்போன சென்னை.. பரிதாப நிலையில் குழந்தை
சென்னை: சென்னை கொடுங்கையூரில் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத மன விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் அருகே முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ஆஷா (வயது 24).
இவருக்கும் அமீன் பாஷா என்பவருக்கும் இடையே ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நடிகர்களின் ஆசை வார்த்தை.. நம்பிய பெண்! ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு தற்கொலை - சட்டமும் காலாவதி
தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை
அமீன் பாஷா - ஆஷா தம்பதிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. எல்லா தாய்மார்களை போலவும் தானும், பெற்ற குழந்தையை பாசமாக வளர்க்க வேண்டும் என்றும்.. குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ வேண்டும் என்றும் ஆஷா இருந்துள்ளார். ஆனால் தனது குழந்தைக்கு ஆஷாவுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆஷா கடும் விரக்திக்குள்ளானதாக கூறப்படுகிறது.
தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்
மேலும் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாராம். தான் ஆசை ஆசையாய் பெற்றெடுத்த குழந்தைக்கு தன்னால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை அவரை மேலும் மேலும் உருக்கியுள்ளது. இதனால் மிகுந்த மன வேதனையுடன் இருந்த ஆஷா, நேற்று முன் தினம் யாரும் எதிபாராத வகையில் தற்கொலை செய்திருக்கிறார். இரவு வீட்டின் சமையல் அறையில் இருந்த இரும்பு கொக்கியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
உறவினர்கள் அதிர்ச்சி
குழந்தையை பெற்றடுத்த 40 நாட்களிலே தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தாய் ஆஷா உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், உயிரிழந்த ஆஷாவின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தனது குழந்தைக்கு பால் கொடுக்க இயலாத காரணத்தினால் ஆஷா மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
வேறு ஏதேனும் காரணமா?
குறிப்பாக ஆஷா தாய்ப்பால் கொடுக்க முடியாத காரணத்தினால்தான் மன விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆஷாவின் குடும்பத்தினருடன் இது தொடர்பாக விசாரணை நடப்பதாக தெரிகிறது. குழந்தை பிறந்த 40 நாட்களில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.