ஆளுநரா? சனாதன காவலரா? ஆளுநர் பேச வேண்டியது சட்ட தர்மம்.. மனு தர்மம் அல்ல! வெளுத்து வாங்கிய முரசொலி!
சென்னை : தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்துவரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பத்தையே அதிகம் விதைத்து வருகின்றன எனவும், ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல! என முரசொலி தலையங்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஆளுநர் சட்டத்தின் படியே பேச வேண்டுமெனவும், மனு தர்மத்தின் படி அல்ல என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

முரசொலி விமர்சனம்
அதில்," தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்துவரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பதையே அதிகம் விதைத்து வருகின்றன. அதுதான் அவரது உள்ளார்ந்த நோக்கமா எனத் தெரியவில்லை. 'நீட்' விலக்கு மசோதாவுக்கு அனுமதி தராமல் ஆளுநர் மாளிகையில் ஊறப்போட்டு வைத்து கோடிக்கணக்கான மக்களின் விரும்பத்துக்கு எதிராக இருந்தார். திரும்பத் திரும்பச் சொன்ன பிறகு - அவர் திருப்பி அனுப்பியதை அவருக்கே திருப்பி அனுப்பிய பிறகுதான் - டெல்லிக்கு அனுப்பினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
அடுத்ததாக புதியக் கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல மாறி அனைத்து மேடைகளிலும் அதனைப் பற்றிப் பேசி வருகிறார். புதிய கல்விக் கொள்கையை படிக்காமலேயே தமிழ்நாட்டில் எதிர்த்து வருகிறார்களாம். அவர் கண்டுபிடித்து இருக்கிறார். திடீரென பாப்புலர் ப்ரெண்ட் இந்தியா என்ற அமைப்பைப் பற்றி ஒரு கல்லூரியில் பேசினார் ஆளுநர். அந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டு இருக்குமானால் அதற்கு சட்டரீதியான விளக்கத்தைக் கேட்கலாம். அதைவிட்டு விட்டு அரசியல்வாதியைப் போல ஒரு ஆளுநர் பேசியது சர்ச்சையானது. தேசம் என்பதை எந்தப் பிரிவினையும் இல்லாமல் பார்க்கிறாராம். அதாவது மாநிலம் என்று பிரித்து பார்க்கவில்லையாம்! தேசத்தைப் பிரிவினை இல்லாமல் பார்ப்பவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருக்க எப்படி ஒப்புக் கொண்டார்?

சனாதன தர்மம்
இவை அனைத்தையும் விட ஆளுநர் உதிர்த்து வரும் ஆன்மிக - தத்துவமுத்துக்கள் அபத்தக் களஞ்சியமாக இருந்து வருகின்றன. அவரது ஆன்மிகம் என்பது அவரது உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் பேசிய பேச்சு என்பது - தன்னை சனாதனக் காவலராக காட்டிக் கொள்ளும் வகையில் பேசி இருக்கிறார். சனாதன சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார் என்பதையே இதன் மூலமாக அறிய முடிகிறது. "வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழி முறையாக இருக்கும்" என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர்.

அண்ணல் அம்பேத்கர்
இவருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. சனாதன தர்மம் என்றால் என்ன என்று அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும். பூரி ஜகநாதர் கோவிலுக்குள் அவரைச் செல்லவிடாமல் தடுத்தது சனாதனம். "கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சக மனிதனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்துவது சனாதனம். எறும்புக்குச் சக்கரை போட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இத்தகைய கபட வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்" என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். இதுதான் சனாதனம்.

ஆண் சனாதனிகள்
சனாதனத்தை ஆதரிக்கும் 'ஆண் சனாதனிகள்' தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மத்தியில் அதை படிக்க முடியுமா? தங்கள் மகள்களைத்தான் அப்படி நடத்த முடியுமா? 'பெண்கள் வேலைக்கு போனதால்தான் வேலையில்லா திண்டாட்டம் வருகிறது' என்றும், 'பெண்ணை தனியாக விட்டால் தப்பு நடக்கும்' என்றும் இன்னமும் உட்கார்ந்து சிலர் கதாகலாட்சேபம் செய்து வருகிறார்கள் ( இணையத்தில் இந்த காணொளிகள் இருக்கின்றன) அல்லவா இதுதான் சனாதனம். இதனைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா? "சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர்.

மனு தர்மம்
என்ன சொல்ல வருகிறார்? அதே போலக் குண்டு போடச் சொல்கிறாரா? 'கிறிஸ்தவ' அமெரிக்கா - 'சனாதன' அமெரிக்காவாக ஆகிவிட்டது என்கிறாரா? இனி அமெரிக்கா செய்யும் அனைத்துச் செயலும் சனாதனத்தைக் காப்பாற்றச் செய்யும் செயல் தானா? பாகிஸ்தானுக்கு அவர்கள் உதவி செய்தாலும் அது சனாதனத் தொண்டா? என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறாரா ஆளுநர்? ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல!" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications