ஜமாத்தில் குழா பெற முடியாது.. இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்
நீதிமன்றம் அல்லாமல் ஜமாத்துகள், தனியார் அமைப்புகளிடம் குழா எனப்படும் விவாகரத்தை இஸ்லாமிய பெண்கள் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: இஸ்லாமிய பெண்கள் நீதிமன்றம் அல்லாமல் ஜமாத்துகள், ஷரியத் கவுன்சில் மற்றும் தனியார் அமைப்புகளிடம் குழா எனப்படும் விவாகரத்தை பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. தனியார் அமைப்புகள் இதுகுறித்து முடிவு செய்வதற்கு அவை ஒன்றும் நீதிமன்றங்கள் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
திருமணமான இஸ்லாமிய பெண்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கணவரை பிரிவதற்கு குழா என்று அழைக்கப்படுகிறது. திருமணம் செய்து வைக்கும் ஜமாத்துகள், காஜிகள், இஸ்லாமிய இயக்கங்கள், ஷரீஅத் கவுன்சில் மூலமாக பெண்கள் குழா பெற்று வந்தனர்.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இதற்கு அனுமதி உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஷரீஅத் கவுன்சிலில் ஒரு பெண் தனது கணவரை குழா மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து இருக்கிறார்.

கணவர் தொடர்ந்த வழக்கு
இந்த நிலையில் இந்த அமைப்பின் மூலம் தன்னை விவாகரத்து செய்து மனைவி பெற்ற சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். முகலாயர் ஆட்சி, வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் இருந்த சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் செல்லாது என்று உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி அவர் இந்த வழக்கை தொடர்ந்தார்.

ஷரீஅத் கவுன்சில் நீதிமன்றம் இல்லையே
நீதிபதி சரவணன் முன்னிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஷரீஅத் கவுன்சில் என்பது ஒரு தனியார் அமைப்பு என்று கூறினார். பிரச்சனைகளுக்கு தீர்ப்பு சொல்வதற்கு அவை ஒன்றும் நீதிமன்றங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குழா சான்றிதழ் ரத்து
எனவே அதுபோன்ற அமைப்புகள் விவாகரத்து வழங்கி சான்றிதழ் வழங்கிட முடியாது எனக் கூறிய அவர், கணவரிடம் குழா கேட்ட மனைவிக்கு ஷரீஅத் கவுன்சில் விவாகரத்து வழங்கி கொடுத்த சான்றிதழை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார். இந்த பிரச்சனைக்கு கணவனும் மனைவியும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணை குழு அல்லது குடும்ப நல நீதிமன்றத்தை நாடி தீர்வு காணுமாறும் நீதிபதி தெரிவித்தார்.

2017 விதிக்கப்பட்ட தடை
ஏற்கனவே ஷரீஅத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகள் குழா சான்றிதழ் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருப்பதையும் நீதிபதி தெரிவித்து உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பதர் சையித் வழக்கில் காஜி மூலமாக குழா முறைப்படி விவாகரத்து செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டதையும் இந்த வழக்கில் நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

குடும்ப நல நீதிமன்றம்
1937 முஸ்லிம் தனிநபர் சட்டமான ஷரீ அத் சட்டத்திலும் குழா முறைப்படி விவாகரத்து பெற வேண்டும் என்றால், குடும்ப நல நீதிமன்றத்தையே நாட வேண்டும் என்றும், ஜமாத் அல்லது தனியார் அமைப்புகள் மூலமாக குழா பெற முடியாது என்ற விதி உள்ளதையும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டு, அங்கு செல்லுமாறு அந்த பெண்ணுக்கு அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications