ஜாதிவாரி கணக்கெடுப்பு - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்தான் சமூக நீதி காவலர் என சீமான் பாராட்டு!
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உண்மையான சமூக நீதி காவலர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: குடிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து அதற்காக நிதியும் ஒதுக்கியதன் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் ஐயா நிதிஷ்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
அறுபது ஆண்டுகாலமாகச் சமூகநீதி மண், பெரியார் மண், சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி, சமூகநீதிக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொண்டு தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட திராவிடக் கட்சிகள், உண்மையான இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதற்கான குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுத்து ஏமாற்றி வருகின்றன.
அவ்வாறெல்லாம் வெற்றுக்கூச்சலும், வெளிவேடமும் இடாத பீகார் மண் குடிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான சமூகநீதிக்காவலர் பீகார் முதல்வர் ஐயா நிதிஷ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் இடஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்ய வேண்டும். அனைத்து தமிழ்ச்சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்க முன்வர வேண்டுமெனவும் முன்வைக்கப்படும் கோரிக்கையின் நியாயத்தை பரிசீலிக்க வேண்டியதும் பேரவசியமாகிறது. 5 பேருக்கு 50 பேருக்கான உணவைத் தருவதும், 50 பேருக்கு 5 பேருக்கான உணவைத் தருவதும் ஏற்கத்தக்கதுமல்ல; சமூக நயன்மையுமல்ல! அத்தகைய அசமத்துவமானப் போக்கு உருவாகமலிருக்க, குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பின் மூலம் சமூகங்களின் மக்கள்தொகையைக் கண்டறிந்து, எண்ணிக்கை விகிதத்திற்கேற்ப அவர்களுக்கான விகிதாச்சாரத்தை வழங்குவதே தகுந்த சட்ட நடவடிக்கையாகும்.குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு, அதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த தேர்தலில் திமுகவும் அதனைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, அதனை விரைந்து சாத்தியப்படுத்தி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சரிவர நிர்மாணிப்பது உகந்த செயலாகும். ஆகவே, பீஹாரை போன்று குடி(சாதி)வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட நடவடிக்கைகள் எடுத்து எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மக்கள்தொகைக்கேற்ப சரிசமமாகப் பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், இத்தோடு மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தி அதன் முடிவையும் முன்வைக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.