EXCLUSIVE: மக்களின் உணர்வுகளை புரிந்தவன் நான்.. நிச்சயம் வெல்வேன்.. நவாஸ் கனி நம்பிக்கை!
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: என் தொகுதி மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்தவன் நான்.. அதனால்தான் இந்த தேர்தலில் போட்டியிட போகிறேன்" என்று ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது. அறிவித்த அடுத்த கணமே ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
மறைந்த கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான நபர் காதர் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தலைவர் காதர் மொகைதீன்.
தொகுதி கிடைத்ததும் ராமநாதபுரம் வேட்பாளரை அறிவித்த ஐயூஎம்எல்.. நவாஸ் கனி!
பாரம்பரிய கூட்டணி
அதேபோல, கருணாநிதி மீது ஆரம்பத்திலிருந்தே மரியாதையும் பாசமும் வைத்திருப்பவர் காதர் மொகைதீன். அதனால் இந்த கூட்டணி ஒரு பாரம்பரியமான கூட்டணி என்றே சொல்லலாம்.
நம்பிக்கை
இப்போது காதர் மொகைதீனுக்கு வயது 80 ஆகிவிட்டது. முன்புபோல உடல்நிலை இல்லை என்றாலும், கட்சியில் இன்னும் வலிமை குறையாமல் இருக்கிறார். அதனால் தனது நம்பிக்கைக்குரிய நபரான நவாஸ் கனி என்பவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தி உள்ளார்.
எஸ்டி கூரியர்
பொதுவாக ராமநாதபுரம் தொகுதியில் இஸ்லாமிய இன மக்கள் அதிகம் வசிப்பதால் அது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படுவது இயல்பு. அதன்படி நவாஸ் கனி இன்று வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் மிகப்பெரிய பணக்காரர். புகழ் பெற்ற எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் உரிமையாளரும்கூட.
ஏணி சின்னம்
கடந்த வாரமே இவர் ஏணி தொகுதியில் அந்த தொகுதியில் போட்டியிட போவதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் வேட்பாளராகவே அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக நவாஸ் கனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டோம். அவரிடம் இதுகுறித்து பேசியபோது சொன்ன தகவல்கள்தான் இவை:
கேள்வி: புது வேட்பாளராக களமிறங்கி உள்ளீர்களே? இதற்கு என்ன காரணம்
நான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன். என் தொகுதி மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டவன். இதுதான் முதல் காரணம்.
கேள்வி: மக்களை உணர்வுகளை புரிந்து கொண்ட நீங்கள், இனி அவர்களுக்காகவும், உங்கள் தொகுதி வளர்ச்சிக்காகவும் என்னவெல்லாம் செய்ய திட்டம் வைத்துள்ளீர்கள்?
பெரும்பாலும் என் மாவட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள், மண்பாண்ட குயவர்கள் அதிகம். இவர்களின் அடிப்படை தேவைகள் என்னென்ன என்று எனக்கு தெரியும். இவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து அவர்கள் அனைவரும் விரும்பி ஏற்ற பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன். என் தொகுதியில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. அதனை தீர்க்க முழு முயற்சி செய்வேன். தொண்டி துறைமுகம் அதை கொண்டு வருவேன், உப்பு நிறுவனம் மிகவும் நலிவடைந்திருக்கிறது. அதை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன். மீன்பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கை கொண்டு வருவேன்.
கேள்வி: ராமநாதபுரம் ஒரு வறட்சி மாவட்டம். மற்றொரு புறம் படித்த வேலையில்லாத இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
இந்த மாநிலத்திற்கென்று பிரத்தியேகமாக எந்த ஒரு தொழிற்சாலையும் கிடையாது. ஆனால் நான் வெற்றி பெற்றால், பருத்தி, மீன், விவசாயம் தொழிற்சாலையை கொண்டு வந்து அதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நிறைய திட்டங்களை வைத்திருக்கிறேன்.
கேள்வி: ராமநாதபுர மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு வருவீர்களா?
நிச்சயமாக! மத்திய மாநில அரசு உதவியுடன் இதை கண்டிப்பாக கொண்டு வருவேன்.
கேள்வி: உங்களுக்கு போட்டியாக அதிமுக - பாஜக கூட்டணி சார்பாக நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக ஒரு தகவல் வருகிறதே.. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
அவரும் நானும் நல்ல நண்பர்கள். இருப்பினும் அவர் திருநெல்வேலியை சார்ந்தவன். நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன். அதனால் என் தொகுதி மக்கள் என்னை முழுமையாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்குகிறேன்" என்றார்.