அடுத்த சர்ப்ரைஸ் தந்த ரயில்வே.. நெல்லை டூ சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் 20 பெட்டி! பயணிகள் ஹேப்பி
சென்னை: ரயில்வேயின் அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.. களைப்பின்றி வேகமான பயணம் காரணமாக பொதுமக்கள் இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்கள்.. இதன்காரணமாக கூடுதல் பெட்டிகள், தொழில்நுட்ப அம்சங்கள் போன்றவை வந்தே பாரத் ரயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், நெல்லைக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.
சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 8 பெட்டிகளுடன், கடந்த 2023, செப்டம்பரில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது..

இந்த ரயில் நெல்லையில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. அதுபோலவே சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
ரயில் பயணிகள் மகிழ்ச்சி
இந்த ரயில் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக இருந்து வருவதால், கூடுதல் பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்கு ரயில்வே நிர்வாகமும் ஒப்புதல் தந்ததையடுத்து, இந்த ரயிலுக்கு கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன.. அந்தவகையில், 16 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது.
பயணிகள் பெட்டி 18
எனினும், பயணிகள் அதிக அளவு பிரயாணம் செய்வதால், கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, கூடுதலாக 4 பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீல நிற 16 பெட்டிகள் உள்ள நிலையில், காவி நிறத்தில் 20 பெட்டிகள் கொண்ட ரயில், கடந்த வாரமே நெல்லை வந்து சேர்ந்தது.. அந்த ரயில் நேற்று முதல் ஓடத்துவங்கியிருக்கிறது.
அந்தவகையில், தற்போது சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் ஓட துவங்கியிருக்கிறது.. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், 312 பயணிகள் இதில் இப்போது பயணிக்க முடியும். அப்படியானால் ஒரே நேரத்தில் 1440 பயணிகள் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம். இந்த ரயிலில் 18 சேர் கார் பெட்டிகள், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகள் உள்ளன.
புதிய சேவை ஆரம்பம்
இது பண்டிகைக் காலம் என்பதாலும், ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா, தீபாவளி விரைவில் வரஉள்ளதாலும், 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம் சேவை ஆரம்பமாகியிருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications