நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டம் சோலையாறில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது.
சின்கோனா, சின்னக்கல்லாறு பகுதிகளில் 9 செமீ மழையும் வால்பாறையில் 7 செமீ மழையும், நடுவட்டம், நீலகிரியில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கூடலூர், அவலாஞ்சியில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில் 4 செமீ மழையும், ஏற்காடு சிவலோகத்தில் தலா 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தேக்கடி, பெரியாறு, கடலூர், கன்னியாகுமரி, பேராவூரணி, ஓமலூர், கள்ளக்குறிச்சியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல் வருகின்ற 15ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
நேற்று மாலை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதி, மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 17ஆம் தேதிவரைக்கும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.