தமிழிசை சொன்னாரே.. எச். ராஜாவும் முழங்கினாரே.. மெகா கூட்டணி என்னாச்சு??
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியின் வருகைக்கு முன்போ அல்லது மோடியின் வருகையின்போதே பாஜக மெகா கூட்டணியை முடிவு செய்து விடும் என்று தமிழக பாஜகவினர் குறிப்பாக எச் ராஜா, தமிழிசை போன்றோர் கூறி வந்த நிலையில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றிருப்பது பாஜகவை தமிழகத்தில் அதிமுக உட்பட யாரும் விரும்பி ஏற்பதற்கு தயாராக இல்லையோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
கடந்த 2014 - நாடாளுமன்ற தேர்தலின்போது குஜராத் முதலைமைச்சர் மோடி வளர்ச்சியின் நாயகனாக கட்டமைக்ப்பட்டார். அப்போது ஆட்சியில் தொடர்ந்து 10 வருடங்களாக இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருந்த ஊழல் இவையெல்லாம் சேர்த்து மக்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சிகளுக்கும் காங்கிரஸ் மீதிருந்த வெறுப்பின் காரணமாகவும் பாஜக மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று கட்டமைத்த பிம்பத்தை நம்பியும் ஏறக்குறைய 43 கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஓடோடி வந்தன.
தமிழகத்திலும் அதே நிலைதான் நீடித்தது, மதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் தமிழருவி மணியன் போன்றொரும் பாஜகவுக்கு ஆதரவாக கடுமையாக லாபி செய்தனர். இப்படிப்பட்ட நிலையில் தேர்தலின் நெருக்கத்தில் தன்னையும் பிரதமர் வேட்பாளாராக எண்ணிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மோடிக்கு எதிராக மோடியா லேடியா என்று கேட்டு இந்தியாவை அதிர வைத்தார். தேர்தலின் முடிவுகள் தமிழகத்தில் பாஜக அணிக்கு இரு இடங்களை பெற்று தந்தது அதில் கன்னியாகுமரி தொகுதியில் மதம் பெரும்பங்கு வகித்தது அதே போல பாமக அன்புமணியின் தொகுதியில் ஜாதி பெரும்பங்கு வகித்தது என்ற விமர்சனங்கள் இருந்தது. அதை தாண்டி வேறு எங்கும் பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை. அதிமுக அமோக வெற்றி பெற்றது.
மக்கள் மனதில் விரோதம்
இந்நிலையில் இப்போது பாஜக தமிழகத்திற்கு விரோதமான கட்சி என்ற எண்ணம் தமிழக மக்கள் மனதிலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியிலும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனாலேயே தேர்தல் நெருங்கி வரும் சூழலிலும் யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வெளிப்படையாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவில்லை. திமுக தனது தலைமையிலான கூட்டணியை அறிவித்து விட்ட சூழலில் ஆளும் கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப் பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல ஆடிட்டர் குருமூர்த்தியும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ராமதாஸ் அத்வாலே, போன்றோரும் அதிமுக பாஜக கூட்டணி அமையும் என்றே கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரைக்கு வந்த பிரதமர் கூட்டணி குறித்து எதுவும் பேசாமலேயே திரும்பி சென்று விட்டார்.
யாரைப் பற்றியும் பேசலையே
ஜெயலலிதா மறைவுக்கு பின்னரே அதிமுகவை பாஜகதான் இயக்கி வருகிறது என்ற குற்றசாட்டு எழுந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த முடிவு நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுடன் கூட்டணியில் இருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்ட புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி கூட மேடையில் இல்லை. ஒருவேளை அவர் மட்டும் மேடையில் ஏற்றப்பட்டால் தமிழகத்தில் வேறு கட்சிகள் இல்லை என்ற இமேஜ் ஏற்பட்டு விடும் என்று பாஜக எண்ணியிருக்கலாம்.
10% குறித்து மட்டும் பேச்சு
ஆனால் அவர்களோடு கூட்டணியில் இணையப் போவதாக கூறப்படும் பா.ம.க - வோ அல்லது தே.மு.தி.க வோ கூட அவர்களுடன் விழா மேடையில் இல்லை என்பது அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்தது. விழாவில் பேசிய பிரதமரும் தனது வழக்கமான எதிர்கட்சிகளை சாடும் போக்கை கைவிட்டு இருந்தார். காங்கிரஸ் குறித்து ஒரு வார்த்தை கூட இங்கு பேசவில்லை அதோடு திமுகவை குறித்தும் நேரடியாக எதுவும் பேசாமல் உயர்சாதி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் சுய நல சக்திகள் என்று மட்டுமே விமர்சனம் செய்திருந்தார்.
கஜா புயல் குறித்தும் பேசலை
நேற்றைய பிரதமரின் பேச்சில் கூட்டணி குறித்த பேச்சுகள் இல்லாததோடு தான் செய்த பணிகள் குறித்தோ அல்லது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள் குறித்தோ பேசாமல் சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவினர் கூறி வந்தபடி நேற்று பிரதமர் கூட்டணி எதுவும் பேசாமல் சென்றது தமிழகத்தில் அதிமுக உட்பட பிற கட்சிகள் எதுவும் சேர்த்துக் கொள்ள அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையோ என்ற கேள்வியை இந்த தருணத்தில் எழும்புவதை தவிர்க்க முடியவில்லை.
10 சீட் குறித்துப் பேச்சு
தமிழிசை கூட 10 தொகுதிகளை வென்று மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துவோம் என்றுதான் கூறினார். ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் மெகா கூட்டணி அமைத்து குறைந்தது 30 தொகுதிகளையாவது வெல்வோம் என்றே தொடர்ந்த கூறிவருகிறார் என்றால் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற தெளிவு இதுவரை பாஜகவால் ஏற்படுத்த முடியவில்லை.
கடுப்பில் அதிமுக
அதிமுகவுக்குள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பி துரை, பொன்னையன், போன்றோராலும் அதிமுக எம்.பிக்களாலும் முன் வைக்கப்படும் சூழலில் அதிமுக தலைமையும் இப்போது அதிமுகவுடன் கூட்டு என்று அறிவித்து இப்போது தேர்தலை சந்தித்தால் ஆளும்கட்சிகளின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை இரண்டு மடங்கு சந்திக்க வேண்டி வருமோ என்று அஞ்சுவதாகவே தகவல்கள் கூறுகின்றன.
இனியாவது பேசுவாரா
இந்த நிலையில் அடுத்த மாதம் மீண்டும் தமிழகத்திற்கு வரவுள்ள பிரதமர் திருப்பூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் பேசவுள்ளார். அதற்கு முன்னதாகவாவது கூட்டணி கணக்குகள் முடிவாகுமா அல்லது மீண்டும் இது போன்ற இழுபறி நிலைதான் நீடிக்குமா என்பது பிரதமரின் வருகையின்போது தெரிந்துவிடும்.