அம்மாவின் செல்லபிள்ளை நான்! எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி! மோதி பார்ப்போமா? போட்டுத் தாக்கிய புகழேந்தி
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்ல பிள்ளையாக வலம் வந்த தன்னை இயேசுநாதரை வெள்ளி காசுகளுக்கு காட்டி கொடுத்த யூதாஸ் போல், வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் போன்ற எடப்பாடி பழனிச்சாமி யார் என்று கேட்பதற்கு அருகதை இல்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது சொந்த ஊரான சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," அதிமுக அலுவலகம் குறித்து பேசுவதற்கு புகழேந்தி யார் என கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் அமமுகவில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து நீக்கப்பட்டும் அவருக்கு அதிமுக குறித்து பேச எந்த உரிமையும் இல்லை என்றார்.
ஜெயலலிதாவின் அரசியல் மாணவர் தான் எடப்பாடி.. ஒரே போடாக போட்ட செல்லூர் ராஜு.. திமுக மீதும் அட்டாக்
எடப்பாடி பழனிசாமி
அதோடு, ஒரு வார்டு கவுன்சிலர் பதவியை கூட பெற இயலாதவர் என கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 2000 வாக்குகளை பெற்றார். அவர் எல்லாம் பெரிய ஆளே கிடையாது. ஊடகங்களில் தான் அவரிடம் பேட்டி எடுத்து பெரியாள் ஆக்குகின்றனர் என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னைப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையும் கிடையாது என புகழேந்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.
புகழேந்தி பதிலடி
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலையை இழந்து விட்டார். சமன்பாடின்றி தொடர்ந்து பேசி வருகிறார். அதன் வெளிப்பாடுதான் என்னைப் பற்றிய எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம். 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராக நான் இருந்தேன். பல வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சறுக்கல்களை சந்தித்தபோது அவருக்கு சட்ட போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
ஏன் அவருக்கு பிணை வழங்கியதும் நான்தான். என்னை பார்த்து யார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் நானும் அவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசி இருக்கிறோம். அப்போதுதான் அவருக்கு பால்வள துறையில் பதவி வழங்கப்பட்டது. அவரது வீட்டுக்கு மின்சாதன பொருட்கள் வாங்குவதற்கு கூட பெங்களூருவில் என்னைத்தான் அணுகினார். அப்போது இந்த புகழேந்தி யார் என தெரியாதா? என்னை யார் என்றே தெரியவில்லை என்றால் எதற்காக அதிமுகவில் சேர்ந்தவுடன் எனக்கு செய்தி தொடர்பாளர் பதவியும் அம்மா பேரவை இணை செயலாளர் பதவியும் வழங்க வேண்டும்.
உளறி வரும் எடப்பாடி பழனிச்சாமி
கர்நாடகாவில் கோலார் இருக்கிறதா கோலாலம்பூர் இருக்கிறதா என்பது கூட தெரியாமல், பிரிவு உபச்சார விழாவை விபச்சார விழா என உளறி வரும் எடப்பாடி பழனிச்சாமி அந்த வகையிலேயே என்னைப் பற்றியும் உளறி இருக்கிறார். அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்ல பிள்ளையாக நான் இருந்தேன் அது மட்டுமல்லாமல். அவர் தேர்தலை சந்திக்க போது ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறுப்பாளராகவும் புதுச்சேரியில் பொறுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை வந்த போது நான் தான் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தமிழர்கள் காப்பதற்கு உதவினேன்.
அருகதை கிடையாது
அதற்கு கூட என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. என் மனைவியும் காயமுற்றார் அப்போதெல்லாம் எடப்பாடி என்பவர் கட்சியில் ஒரு ஆளே கிடையாது. என் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வரை தொடர்பு கொண்டு இதுதான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தருவதா எங்கள் மாநில செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கர்நாடக மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என எனக்காக பேசி இருக்கிறார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது கூட என்னை தொடர்பு கொண்டு நீங்கள் தான் முதலில் செல்ல வேண்டும் என பேசியவர் ஜெயலலிதா. இது எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஏதேதோ பேசி வருகிறார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அம்மாவின் செல்லப்பிள்ளை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளி காசுகளுக்காக இயேசு நாதரை காட்டிக் கொடுத்த யூதாஸ். வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன், மேதகு பிரபாகரனை காட்டிக் கொடுத்த கருணா போன்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என விமர்சித்துள்ளார்.