மா.செக்கள் கூட்டத்திற்கு பிறகு அதிமுகவில் என்ன நடக்கும்? ஏர்ப்போர்ட்டில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
சென்னை : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக இரு பிரிவாகச் செயல்பட்டு வரும் நிலையில், 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என ஓபிஎஸ் அணி அறிவித்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், மா.செக்கள் கூட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணி என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் மாறி மாறி இரு தரப்பும் விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ், தனியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் இருவரும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் கூட்டம்
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிளபுபட்ட அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதல்முறையாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் பிளான்
எடப்பாடி பழனிசாமி அணி, பொதுக்கூட்டம், போராட்டம் என்று மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதால், ஓ.பன்னீர்செல்வமும் தனது பங்குக்கு ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். ஜனவரி 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு, அதிமுக இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது என்பதை உச்ச நீதிமன்றத்திடம் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கும் வகையிலேயே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஓபிஎஸ் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பொதுக்குழு நடத்தி அதன் முடிவுகளை தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பிப்பது தான் ஓபிஎஸ்ஸின் திட்டம் என்று சொல்லப்படுகிறது.

முன்னாடியே சொல்ல முடியாது
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "வரும் 21-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்குப் பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது" எனத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்தக் கருத்து பரபரப்பைக் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications