எடப்பாடி கையில் அதிமுக ‘கீ’! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட ஓபிஎஸ்! இன்னும் 10 நாட்கள் அமைதியோ அமைதி!
சென்னை : அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகம்
பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இபிஎஸ்ஸிடம் சாவி ஒப்படைப்பு
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பட்டு ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இதனையடுத்து சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிமுக விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் தான் உள்ளது? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

நீதிபதி உறுதி
இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்ப்பிடம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 19க்கு முன்பாக பட்டியலிட முயற்சிப்பதாக ஓ.பி.எஸ் தரப்பிடம் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் இன்னும் 10 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications