ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக இளைய மகன்.. ஜெ.தீபா இல்ல நிகழ்வுக்கு சென்று நகை அணிவித்து வாழ்த்திய ஜெயபிரதீப்!
ஜெ.தீபா மகள் பெயர் சூட்டு விழாவில், ஓபிஎஸ் சார்பில் ஜெயபிரதீப் கலந்துகொண்டுள்ளார்.
சென்னை : ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்துகொண்டு, குழந்தையை வாழ்த்தியுள்ளார். ஓபிஎஸ் தேனி சென்ற நிலையில், அவர் சார்பாக ஜெயபிரதீப் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அவரை திடீரென சந்தித்து, தங்கள் மகளின் பெயர்சூட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் பெயர் சூட்டு விழாவில், ஓபிஎஸ் சார்பில் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் கலந்துகொண்டுள்ளார்.

ஓபிஎஸ்ஸை சந்தித்த ஜெ.தீபா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சமீபத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற யூகங்கள் எழுந்தன. இதற்கு அவரே விளக்கம் அளித்து, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு நேரில் அழைப்பு
ஓபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.தீபா, "எனது குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்க வந்தேன். அரசியல் தாண்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் நல்ல பரிச்சயம் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து அழைக்க வந்தேன்" எனத் தெரிவித்தார். ஜெ.தீபா - மாதவன் தம்பதியருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வுக்காக ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் ஜெ.தீபா.

இன்று பெயர்சூட்டு விழா
ஜெ.தீபாவுக்குக் கடந்த அக்டோபர் 31-ம் தேதி குழந்தை பிறந்தது. அதனைத் தனது பிறந்த நாளான நவம்பர் 10-ஆம் தேதி தனக்கு குழந்தை பிறந்த சேதியை அறிவித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார் தீபா. இந்த நிலையில்தான், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டுவிழா இன்று நடைபெற்று வருகிறது.

பங்கேற்ற ஜெயபிரதீப்
இந்த பெயர் சூட்டு விழாவில் ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் சார்பாக, ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்துகொண்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், நேற்று தேனிக்குச் சென்ற நிலையில், இந்த நிகழ்வில் ஜெயபிரதீப் கலந்துகொண்டுள்ளார். ஜெ.தீபாவின் குழந்தைக்கு ஆபரணம் அணிவித்து மகிழ்ந்துள்ளார் ஜெயபிரதீப்.












Click it and Unblock the Notifications