பின்னடைவா? அன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்ததை மறந்துட்டீங்களா? கடைசில நாங்கதான் - ஓபிஎஸ் டீம் பரபர!
சென்னை : பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து அதிமுக யார் பக்கம் என சொல்ல முடியாது என்றும், ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக இருக்காது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய பிறகு மேல்முறையீடு எப்போது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்தது சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு. அதன்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
திருப்பிப்போட்ட தீர்ப்பு.. ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு.. போச்சே.. மீண்டும் 'அணி மாறும்’ படலம்? என்னாகும்?
'ஓபிஎஸ் நீக்கம் செல்லும்’ - மீண்டும் திரும்பிய ஆகஸ்ட் 17 நிலை.. ஐகோர்ட் தீர்ப்பால் ஓபிஎஸ் டீம் ஷாக்!
அதிமுக வழக்கு தீர்ப்பு
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுது. ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான ஈபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பு ரத்து
தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்தாகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஈபிஎஸ் தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்தது இறுதித் தீர்ப்பு அல்ல, அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும், முழுமையான தீர்ப்பு வந்த பிறகு ஓபிஎஸ் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பின்னடைவு இல்லை
மேலும் பேசிய அவர், இன்று இரண்டாயிரத்து ஐந்நூறு பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஈபிஎஸ் தரப்பு கொண்டாடலாம். பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து யார் பலம் என சொல்ல முடியாது, ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். இந்தத் தீர்ப்பால் எங்கள் முயற்சியில் எந்தத் தொய்வும் இல்லை, இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 4 மணிக்கு வந்ததே
முதலில், அவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது, அதன்பிறகு மேல்முறையீட்டில் அதிகாலை 4 மணிக்கு எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதன்பிறகு 9 மணிக்கு அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது, இப்படி மாறி மாறித்தான் தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்து எடப்பாடி தரப்புக்கு சாதகம் எனச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ்ஸ்ஸுக்கு சாதகம் இல்லை
தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம். பொதுக்குழு உறுப்பினர்களை நம்பி இல்லை. இந்தத் தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இறுதித் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வரும். இன்னும் வீறுகொண்டு தொண்டர்கள் வருவார்களே தவிர, எங்கள் ஆதரவு ஒருபோதும் குறையாது. ஓபிஎஸ் தான் வரும் காலத்தில் முதலமைச்சராக வருவார், இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். ஓபிஎஸ்ஸே இறுதியில் வெற்றி பெறுவார் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.