பயணிகளிடம் ஒழுங்கீனம்.. ஒழுங்கா நடக்கனும்! அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: மாநகர அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் எனவும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள்.
தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள், மாணவ மாணவிகள், பெண்கள், அலுவல் பணியாளர்கள், நோயாளிகள் என பல தரப்பினர் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

நடத்துநர், ஓட்டுநர்
இப்படி அன்றாடம் மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வந்தாலும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். சில்லரை இல்லாவிட்டால் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், மரியாதை குறைவாக நடத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.

குற்றச்சாட்டுக்கள்
அதேபோல் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்றும், வேறு வழித்தடங்களில் மாற்றி இயக்குவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க நடத்துனர்களும், ஓட்டுநர்களும் மறுப்பதாகவும், விற்பனை பொருட்கள், விவசாய பொருட்களுடன் வரும் குறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்களை ஏற்ற மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

அறிவுறுத்தல்
குறிப்பாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இந்த பிரச்சனை அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சென்னை போக்குவரத்துக் கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பேருந்து வழித்தடம்
அதில், வேறு வழித்தடங்கள் மற்றும் சாலைகளில் மாநகர பேருந்துகளை இயக்கக்கூடாது என்று நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறக்கி விட வேண்டும் என்றும், அதற்கு முன்பாக நிறுத்தி இறக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சுமை கட்டணம்
பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு ஏற்ப உரிய சுமைக் கட்டண பயண சீட்டை நடத்துநர்கள் வழங்க வேண்டும் என்றும், பயணிகளுடன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அலட்சியமாக நடப்பதை முழுவதுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தவறாக பேசக்கூடாது
பணியின்போது வீணான வார்த்தைகளை, தவறாக பேசுவது, கைக்கலப்பில் ஈடுபடக்கூடாது என்றும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பல்வேறு ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதால் வருவாய் இழப்பு மற்றும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதாக சென்னை போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications