பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவே முடியாது.. சட்டசபையில் முதல்வர் உறுதி
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக முதல்வர் பதில் அளித்துள்ளார்.
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடியாது என சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இன்று 2-வது நாளாக பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது அணைகட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார், பாலாறு குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.
அதில் தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தடுப்பணை
மேலும் பாலாற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு வசதியாக 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் பதில்
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "கடந்த 2006ம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் தடுப்பணை கட்ட ஆந்திரா முயன்றபோதே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.
கட்ட முடியாது
அதேபோல் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்ட கூடாது என்று கூறி தமிழக அரசும் உச்சநீதிமன்ற கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆந்திர அரசு பாலாறு குறுக்கே தடுப்பணையை கட்டவே முடியாது.
சட்ட ரீதியான நடவடிக்கை
மீறினால் அதை தமிழக அரசு சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தும். பாலாறு நதிநீர் பிரச்சனையை பொறுத்தவரை, தமிழக அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும் தொடர்ந்து அணுகி வருகிறது" என்றார்.