நம்பினால் நம்புங்கள்.. இப்படியும் ஒரு ரோடு.. பாவப்பட்ட மக்கள்.. சென்னைக்கு பக்கத்தில்தான்!
Recommended Video
சென்னை: சிங்காரச் சென்னை என்றால் அது சிட்டிக்குள் மட்டும்தான்.. ஆனால் வெளியே கால் வைத்தால் மக்கள் எந்த அளவுக்கு பரிதாபமாகரமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர முடியும்.
சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட நகர்தான் அஸ்தினாபுரம். ஜிஎஸ்டி சாலையிலிருந்து வெகு உள்ளடங்கி உள்ளதாலோ என்னவோ இந்தப் பகுதியில் ஏகப்பட்ட பிரச்சினைகள். கால்வாய் ஆக்கிரமிப்பு தொடங்கி மோசமான சாலை வரை எக்கச்சக்கமான பிரச்சினைகள்.
அதிலும் அஸ்தினாபுரத்தின் வால் பகுதியாக இருக்கும் திருமலை நகரின் தொடக்கத்தில் மக்கள் படும் பாடு சொல்ல முடியாதது. இந்தப் பகுதியில் உள்ள முக்கியமான பிரச்சினையாக தற்போது சாலை உருவெடுத்துள்ளது.
மோசமான நிலையில் சாலைகள்
அஸ்தினாபுரம் திருமலை நகர் மெயின்ரோடுதான் சர்ச்சைக்குரிய பகுதி. பாதாள சாக்கடைக்காக நன்றாக இருந்த இந்த சாலையைத் தோண்டி எடுத்து குதறிப் போட்டு விட்டனர். குத்துயிரும் குலையிருமாக மாறிப் போயுள்ள சாலையால் போக்குவரத்து பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
சரியாக மூடாத சாலைகள்
பள்ளம் தோண்டிய பின்னர் சரியாக மூட வேண்டும் இல்லையா.. ஆனால் அதைச் செய்யவில்லை. இஷ்டத்திற்குப் போட்டு விட்டுப் போய் விட்டனர். ஆங்காங்கே மண்ணைப் போட்டும், ஒப்புக்கு ஜல்லியைப் போட்டும் ரிப்பேர் செய்தனர். ஆனால் சமீபத்திய மழையில் சாலை இன்னும் மோசமாகி விட்டது.
நடந்தால் பரிசு தரலாம்
இந்த சாலையில் கீழே சறுக்கி விழாமல் நடப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவிக்காத குறைதான். அந்த அளவுக்கு நடக்கக் கூட முடியாத அளவுக்கு படு மோசமாக இருக்கிறது சாலை.
இங்கெல்லாம் மோசம்
சுடுகாடு உள்ள பகுதி மகா மோசமாக இருக்கிறது. இந்த இடத்தில் சைக்கிள் கூட ஓட்ட முடியாது. அப்படி ஒரு மோசமான சாலையாக உள்ளது. கொத்தத் தெரியாதவன் கொத்திய அம்மிக் கல் என்று வடிவேல் சொல்வாரே அது போல காட்சி தருகிறது இந்த "சாலை". நடக்கக் கூட முடியாது. பள்ளம், சேறு, சகதி என பார்க்கவே சகிக்கவில்லை. சுடுகாட்டிலிருந்து பொன்னி அம்மன் கோவில் பஸ் ஸ்டாப் வரை சாலை படு மோசம். அதுவரைதான் பல்லாவரம் நகராட்சி எல்லை வருகிறது.
அவதிப்படும் மக்கள்
இந்த சாலை ஒன்றுதான் திருமலை நகரையும் (இது செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட நகராகும்), அஸ்தினாபுரத்தையும் இணைக்கும் ஒரே சாலையாகும். ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பல்லாவரம் செல்வோர் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். வேறு மாற்றுச் சாலை கிடையாது. இதில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அரசு நகரப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அத்தனை பேரும் பெரும் கஷ்டப்படுகின்றனர்.
சீக்கிரம் சரி பண்ணுங்க
பாதாள சாக்கடைப் பணி முழுமையாக முடிவடையாமல் உள்ளதால் அது முடிந்த பிறகுதான் சாலை போடப்படும் என்கிறார்கள். அது எப்போது முடிந்து, எப்போது சாலை வந்து மக்களுக்கு விமோச்சனம் என்று தெரியவில்லை. மக்கள்தான் முக்கியம், என்பதை மனதில் வைத்து அனைத்துத் தரப்பினரும் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற துயரங்களுக்கு விடிவு கிடைக்கும். எனவே ஆட்சியாளர்களும், நகராட்சியினரும், அதிகாரிகளும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.. ஆனால் முடிவுதான் கண்ணுக்கு எட்டியவரை இருப்பதாக தெரியவில்லை.