பல்லக்கு, பசுமடம், பீப் பிரியாணி- பெரியாரிஸ்டுகளை பற்றி நோ கவலை- ஆன்மீக மோடில் திராவிட மாடல் அரசு
சென்னை: ஆதீனங்களின் பல்லக்கு தூக்குதலுக்கு அனுமதி, கோவில் பசுக்களுக்கான கோசாலை எனப்படும் பசுமடம் கட்டுதல், பிரியாணி திருவிழாவில் பீப் எனப்படும் மாட்டிறைச்சிக்கு தடை என தமிழகத்தில் திராவிட மாடலை முன்வைத்து ஆளுகிற திமுக அரசு பெரியாரிஸ்டுகளை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாடல் தான் திராவிட மாடல். மக்களுக்கான திட்டங்களை அவர்களுக்கு உண்மையில் கொண்டு சேர்ப்பதே திராவிட மாடல். அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் விருப்பமாகும்"
"அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது. எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்"
"திராவிடச் சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது எனவும், 'திராவிட மாடல்' என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. கருப்பையும் சிவப்பையும் யாராலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது" - இவை எல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருபவை. இதனால் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தங்களுடைய அரசு தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர் பெரியாரிஸ்டுகள். ஆனால் இந்த மகிழ்ச்சியும் ஆர்ப்பரிப்பும் பெரியாரிஸ்டுகளுக்கு ஓராண்டுதான் இருந்தது. இப்போது மெல்ல மெல்ல நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது.
உ.பி. பாஜக அரசை மிஞ்சும் தமிழக திமுக அரசு! ஆவடி அருகே ரூ20 கோடியில் பசுமடம்- களமிறங்கிய அமைச்சர்கள்!
பல்லக்கு தூக்குக்கு அனுமதி
இதனைத்தான் அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளிப்படையாகவே தமது அறிக்கை மூலம் இடித்துக் காட்டி இருந்தார். தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி அண்மையில் சர்ச்சையானது. பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கத்தில் தூக்கி வரக் கூடாது என்பது திராவிடர் கழகத்தின் எதிர்ப்பு. மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதை ஏற்க முடியாது என்றது தி.க. இதனை ஏற்று தமிழக அரசும் முதலில் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. ஆனால் கடுமையான நெருக்கடிகளுக்குப் பின்னர் பல்லக்கு தூக்கும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடையை நீக்கி அனுமதித்தது. இதுதான் கி.வீரமணியை கொந்தளிக்க வைத்தது.
வீரமணி கொந்தளிப்பு
அந்த கொந்தளிப்புடன் கி.வீரமணி வெளியிட்டிருந்த அறிக்கையில் "தி.மு.க ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணியவைப்பது ஒரு காவித் திட்டம். இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுக்குச் சுட்டிக்காட்டுகிறோம். இது போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு பின்வாங்கினால், அடுத்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க அரசு எந்த ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பையும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள். ஆன்மிகம் என்பதைவிட, இதன் பின்னே பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் பின்னணி இருப்பதை மறந்துவிடக் கூடாது. மதவெறி காவி சக்திகள் துள்ளிக் குதித்தாலும், தமிழக அரசின் இந்தப் பின்வாங்கல் தோல்வி என்பதுதான் பகுத்தறிவாளர்களின் எண்ணம் என கூறியிருந்தார்.
கோசாலை எனும் பசுமடம்
இந்த பல்லக்கு தூக்குதல் நிகழ்ச்சிக்கு திமுக அரசு அனுமதி அளித்த கையோடுதான் இப்போது கோசாலை கட்டப் போகிறது. அதாவது கோவில் பசுக்களைப் பாதுகாக்க ரூ20 கோடியில் தமிழக அரசு சார்பில் 25 ஏக்கர் நிலத்தில் இந்த கோசாலை கட்டப்பட உள்ளது. சென்னையை அடுத்த ஆவடி,கோயில்பதாகை சுந்தரராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில்தான் இந்த பசுமடம் கட்டப்படுகிறது. இந்த இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பொதுவாக பசு, பசுக்கள் பாதுகாப்பு, கோசாலை என்பதெல்லாம் வட இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பேசுபொருளாக இருக்கும். இப்போது திராவிட மாடல், பெரியார் பூமி என முழங்கும் திமுக ஆட்சியிலும் பாஜகவுக்கு போட்டியாக பசுமடங்கள் கட்டப்படுகின்றன.
பிரியாணி திருவிழா
பல்லக்கு தூக்குதலுக்கு தடை, பசுமடங்கள் கட்டுதல் வரிசையில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது திராவிட மாடல் திமுக ஆட்சியில். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆம்பூர் வர்த்தக மையத்தில், நாளை முதல் 15-ந் தேதி வரை பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி எனப்படும் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. மாட்டிறைச்சிக்கு தடை, மாட்டிறைச்சி வைத்திருந்தாலே அடித்து கொலை என்பதும் கூட வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழக் கூடியதுதான். அப்போதெல்லாம் தமிழகம்தான் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டங்களை நடத்தி இருக்கிறது.
பீப் பிரியாணிக்கு தடை
இப்போது மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்திய பெரியார் மண்ணில்தான் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை; அதுவும் பெரியாரின் வாரிசுகள் என்கிற திராவிட மாடலை மூச்சுக்கு முன்னூறு முறை முழங்குகிற திமுக அரசில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டது இந்த அரசை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிற பெரியாரிஸ்டுகளை ரொம்பவே கோபப்பட வைத்திருக்கிறது. திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட மாட்டிறைச்சி பிரியாணி நாங்க போடுவோம் என எச்சரித்திருக்கிறது. ஆனால் இவற்றை பற்றியெல்லாம் கிஞ்சுத்தும் கவலைப்படாமல் திராவிட மாடல் அரசு என்று முழங்கிக் கொண்டே தமது பாணியில் நடைபோடுகிறது திமுக அரசு. இன்னொரு பக்கம் பெரியாரிஸ்டுகள் எப்போதும் போல அறிக்கை விட்டுக் கொண்டே குமுறவும் செய்கின்றனர்.