எவ்ளோ பெரிய பொய்.. கொரோனாவை வென்றவரா மோடி?பாஜக இப்படி சொல்லுது.. உலக வங்கி அப்படி சொல்லுது -பீட்டர்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக வறுமை கோட்டுக்கு கீழே சென்றவர்களில் 80% பேர் இந்தியர்கள் உலக வங்கி அதிர்ச்சிகர அறிக்கையை வெளியிட்டு உள்ள நிலையில் கொரோனாவை வென்று சாதனை படைத்தவர் பிரதமர் மோடி என்று பாஜக சொல்வது எவ்வளவு பெரிய பொய் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
இதனை கடந்து கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வேலைவாய்ப்பை இழந்தார்கள். சிறு குறு நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு பலரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலைக்கு சென்றார்கள்.
உலக வங்கி
இது குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. உலகளவில் தீவிர வறுமை கோட்டுக்கு கீழ் சென்றவர்களின் விகிதம் கடந்த 2019 ஆம் ஆண்டு 8.4% ஆக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 9.3% ஆக அதிகரித்து இருக்கிறது. அதாவது உலகளவில் 2020 ஆம் ஆண்டு 7 கோடி மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வறுமை கோடு
இதன் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடியை தாண்டியுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் உலக வறுமை கோடு விகிதத்தில் கொரோனா முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்த விகிதம் உயர்ந்ததற்கு அதிகளவிலான மக்கள் தொகையை கொண்ட இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அறிக்கை வெளியிடாத இந்தியா
இந்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வறுமை கோடு விகிதத்தை வெளியிடாததால் அதனை கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே Centre for Monitoring Indian Economy's (CMIE's) Consumer Pyramids Household Survey (CPHS) ஆகிய நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்களின் தகவல்களை வைத்து இந்திய பொருளாதாரத்தை உலக வங்கி கணித்துள்ளது.
கணிப்பு
அதில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 5.6 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டு உள்ளார்கள். CHPS நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் மேலும் 2.3 கோடி பேர் 2020 ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழ் சென்றிருக்கலாம் என்று உலக வங்கி கணித்துள்ளது. '
80% பேர்
அதன்படி 2.3 கோடி முதல் 5.6 கோடி பேர் வரை இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டு இருக்கலாம் என்று உலக வங்கி தெரித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் வறுமை கோட்டிற்கு கீழ் சென்ற மக்களில் 80% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு உலக வங்கி வந்திருக்கிறது.
பீட்டர் அல்போன்ஸ்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "கொரோனா நோய் தொற்றின் போது உலகம் முழுவதும் தீவிரமான வறுமைக்குள் தள்ளப்பட்டவர்கள் 7 கோடியே 10 லட்சம் பேர். அவர்களில் 79% அதாவது 5 கோடியே 60 லட்சம் பேர் இந்தியர்கள். கொரோனாவை வென்று சாதனைபடைத்தவர் பிரதமர் மோடி என்று பாஜக சொல்வது எவ்வளவு பெரிய பொய்!" என்று குறிப்பிட்டுள்ளார்.