கமலாலயத்தில் குண்டு வீச்சு..இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.. கராத்தே தியாகராஜன்பேட்டி
சென்னை: சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு தமிழக பாஜகவின் மூத்த தலைவர் கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக அலுவலகமான கமலாயம் சென்னை தி.நகர் பகுதியில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியினர், மூத்த நிர்வாகிகள் வந்து செல்வதால் கமலாயம் களைகட்டி இருந்தது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் நள்ளிரவில் பாஜக அலுவலகமான கமலாயம் முன்பு திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் குண்டு கமலாயம் முன்பு விழுந்து வெடித்தது. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றார்.
போலீசார் நேரில் விசாரணை
நள்ளிரவு நேரம் என்பதால் பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் நல்லவேளையாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.கண்காணிப்பு கேரமா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒருவர் கமலாயம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
கராத்தே தியாகராஜன் கண்டனம்
அப்போது அவர் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பாஜகவின் மூத்த தலைவர் கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், 'நள்ளிரவு 1:30 மணியளவில் எங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் நடந்தது.
இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்
பாஜகவின் தேர்தல் பணியை தடுக்கவே பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது.காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம். பாஜகவினர் இதுபோன்ற விஷயங்களுக்கு பயப்பட வேண்டாம் .இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.