'நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை.. எழுதி வைத்த உருக்கமான கடிதம்.. சோகம்!
சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நீட் தேர்வு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் நீட் தேர்வு பயம் காரணமாக தமிழகத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.
நீட் தேர்வு பயம் காரணமாக ஏராளமான மாணவிகள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்த வருடம் மட்டும் சில மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த நிலையில் நீட் தேர்வு தமிழத்தில் மேலும் ஒரு உயிரை குடித்துள்ளது.

நீட் தேர்வு ரிசல்ட்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயா (18). கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். ஜெயாவுக்கு சிறு வயது முதலே டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியம் இருந்து வந்துள்ளது. இதற்காக வெறி கொண்டு படித்த அவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ரிசல்ட் வரும்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

'மருத்துவ கனவு சிதைந்து விட்டதே'
இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். ''நீட் தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே; மருத்துவ கனவு சிதைந்து விட்டதே'' என்றபடி ஜெயா அடிக்கடி அழுது புலம்பியுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள் மாணவியின் மனசு ஆறுதல் பெறுவதற்காக அவரை திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபமாக உயிரிழந்தார்
அங்கு சில நாட்கள் இருந்த மாணவி ஜெயா, மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். தொடர்ந்து மன விரக்தியில் இருந்து வந்த அவர் கடந்த 17-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி ஜெயா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

'மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை'
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மாணவி ஜெயா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ''நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்த மன உளைச்சலில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. தினமும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை. என்னை மீண்டும் மன்னித்துவிடு அம்மா'' என்று கூறியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications