அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் விரும்பாத சூழலை எடப்பாடி பழனிசாமிதான் உருவாக்கினார் என்றும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றுதான் பிரதமர் மோடியும் விரும்புகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகத்தை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-
இரட்டை இலை யாருக்கும் இல்லை.. 'புல்லட்’ வாங்க ரெடியாகும் எடப்பாடி..? ஈபிஎஸ் டீம் 'பரபர’ ஆலோசனை!
பாஜக விருப்பம் தெரிவித்தால்
பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தேன். அந்த நிலைப்பாட்டோடு இன்றைக்கு புதியநீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நாங்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என்று சொல்லிவிட்டோம். பாஜக விருப்பம் தெரிவித்தால் தருவோம் என்று என்று சொல்லியிருக்கிறோம்.
கூடிய விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு மாறுகின்ற சூழல் ஏற்படும். எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் சொல்லிவிட்டோம். மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டை நாங்கள் சொல்ல முடியாது. கூடிய விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும். பிரிந்து இருக்கின்ற அதிமுக இணைந்து செயல்பட வெண்டும் என்பதே தொண்டர்களின் மனநிலை ஆகும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
எங்களை சந்திக்கும் போதெல்லாம்
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் பிரதமரும் இருக்கிறார். அதிமுக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றுதான் பாஜகவும் விரும்புகிறது. நாங்களும் விரும்புகிறோம். அதற்கு யார் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். எங்களை சந்திக்கும் போதெல்லாம் இரண்டு அணியும் இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை பிரதமர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டை உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
நல்லது சொன்னால் கேட்க வேண்டும்
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் ஓபிஎஸ்-சிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித ஓபிஎஸ், "ஒரு பெரிய மனுஷன் நல்லது சொன்னால் கேட்க வேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய ஓ பன்னீர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால்தான் சின்னம் கிடைக்கும். அந்த நிலை இருக்கும் போது அவர்களாகவே சில இக்கட்டான நிலையை உருவாக்கி தொண்டர்களை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கிவிட்டார்கள்.
நான் காரணமாக இருக்க மாட்டேன்
சட்ட விதிகளுக்கு புறம்பாக தாமாக இடைக்கால பொதுச்செயலாளர் என அறிவித்துவிட்டார். கழக சட்ட விதிப்படி இரண்டு பேருமே தேர்வு செய்யப்பட்டு 2026-வரை பதவியுள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் பட்டியல் கொடுக்கப்பட்டது. தொண்டர்கள் விரும்பாத ஒரு சூழலை அவர்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள். எங்களை பொருத்தவரை இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்காத நிலைக்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்.
எடப்பாடி பதவியை துறந்துவிட்டார்
கழக சட்டப்படி நான் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். 2 பேரும் கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி தனது பதவியை துறந்துவிட்டார். இனி மறுபடியும் உரிமை கோர முடியாது" என்றார். முன்னதாக ஓபிஎஸ் அணி வேட்பாளாரை நிறுத்தினால் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்குகள் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஒ பன்னீர் செல்வம், " தேர்தல் களத்தில் சந்திப்போம்" என்றார்.