பெரியாரை அவமதிப்பதா.. பாஜக கண்ணில் காமாலை.. ஆவேசத்துடன் பாய்ந்து வெளுத்த டாக்டர் ராமதாஸ்
சென்னை: பாஜக பதிவிட்ட பெரியார் குறித்த கருத்து அருவருக்கத்தக்கது... இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாக சாடிஉள்ளார்.
தந்தை பெரியாரின் 46-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதேபோல, பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், அதிக அளவில் சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
பெரியாரும் மணியம்மையும்.. ஒரு ஆத்மார்த்தமான தோழமை.. அருமையான இணை.. அழகான துணை..!
நினைவு தினம்
இந்நிலையில் பெரியார் குறித்து தமிழக பாஜக ட்வீட் ஒன்றினை பதிவிட்டது. "மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்" என பதிவிடப்பட்டது.
|
எதிர்ப்புகள்
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே இந்த பதிவு போடப்படவும், பெரும் எதிர்ப்புகள் உடனடியாக கிளம்பியது. கடுமையான அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் உருவாக்கியது.. இதனால் உடனடியாக அந்த பதிவினை பாஜக நீக்கிவிட்டது.. ஆனால், tnbjpitwing என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அதே பதிவை திரும்பவும் தனது பக்கத்தில் ரீட்வீட் செய்திருக்கிறது.
வைகோ - ஸ்டாலின்
அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த சர்ச்சை ட்வீட்டை பாஜக நீக்கினாலும், தமிழக தலைவர்கள் கொந்தளித்துவிட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.. "அந்த பயம் இருக்கட்டும்" என்று ஸ்டாலின் ஒரு பக்கமும், பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வைகோ ஒருபக்கமும் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
காமாலை கண்
எனினும் இவர்கள் எதிர்கட்சி தரப்பு சார்பான கண்டனம் என்று எடுத்து கொண்டாலும் கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் "தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சி
உண்மையிலேயே டாக்டரின் இந்த பதிவு பெரும் பாராட்டை பெற்று வருகிறது.. கூட்டணியில் இருந்தும்கூட பெரியாரை விட்டுக் கொடுக்காத ராமதாஸின் இந்த மனப்பான்மை வரவேற்பை அள்ளி தந்து கொண்டிருக்கிறது.. அதே சமயம், "ஈழத் தமிழருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. ஆனால் கூட்டணி தர்மத்துக்காவே ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்" என்று ராமதாஸ் அன்று சொன்னதையும் கூர்ந்து கவனிக்க வேண்டியும் உள்ளது.
ட்விட்டர்வாசிகள்
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழக தலைவர்கள் என்று வந்துவிட்டாலோ, அதற்கு பங்கம் வரக்கூடிய எந்த செயலையும் டாக்டர் ராமதாஸ் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதுதான் நிதர்சனம். கூட்டணி கட்சி என்றாலும் துணிந்து கண்டனம் தெரிவித்த ராமதாஸின் இந்த பதிவிற்கு, பல ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. "உங்கள் கூட்டணியை சேர்ந்த நபர்கள் தான் இப்படி ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்கள் என்றும், "உங்க characterஐ புரிஞ்சுக்க முடியலையே." என்றும் ட்விட்டர்வாசிகள் பதிவு போட்டு வருகின்றனர்.