ரவுடிகள் கையில் துப்பாக்கி.. குண்டுகள்! வியர்த்துபோன வியாசர்பாடி.. சுற்றி வளைத்த போலீஸ்! "மாவுகட்டு"
சென்னை: வியாசர்பாடியில் போலீசார் சுற்றி வளைத்த போது தப்பிக்க முயன்ற ரவுடிகள் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 1 துப்பாக்கி, 10 தோட்டாக்கள், 40 நாட்டு வெடி குண்டுகள் உட்பட ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் டிஜிபியாக சைலேந்திரபாபு ஐஏஎஸ் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தமிழ்நாட்டில் ரவுடிகளை தேடித் தேடி பிடிக்கும் பணி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. அதிலும் அவர் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து காவலர்களை நேரடியாகச் சந்தித்து வழக்குகளை கையாள்வது, ரவுடிகளை பிடிப்பது என பல வழிகாட்டுதல்களை வழங்கி வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தமிழ்நாட்டில் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் காவல் சரக வாரியாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரவுடிகள், குற்றவாளிகள், கஞ்சா விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், வேலூர் சரகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை தீபம் காண வரும் 30 லட்சம் பக்தர்கள்..பார் கோடுடன் கூடிய பாஸ்..டிஜிபி சைலேந்திரபாபு
ஆபரேசன் கஞ்சா
அதேபோல் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை கடத்தி விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ஆந்திரா மாநிலத்திற்கே சென்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்பட்டு வந்த இடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்டவை கடத்தல் குறித்து பல்வேறு பிரிவு காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குற்றவாளிகள் நடமாட்டம்
போக்சோ வழக்குகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பழைய புகார்களையும் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாட்டு குற்றவாளிகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு குற்றவாளிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் இல்லை என்று சைலேந்திரபாபு பேசியிருந்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். அண்ணா நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டாக்கத்திகளுடன் ரவுடிகள் மிரட்டி பணம் பறித்த சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல்துறையினர் வியாசர்பாடி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
ரவுடிகள் கையில் கட்டு
அதேபகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வெள்ளை பிரகாஷ் மற்றும் அப்பு ஆகியோரை மாநகர காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடிகள் போலீசிடம் இருந்து இருவரும் தப்பிக்க முயற்சி செய்தனர். அப்போது நிலை தடுமாறி வழுக்கி விழுந்த ரவுடிகள் இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த ரவுடிகள் வெள்ளை பிரகாஷ், அப்பு ஆகியோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி , நாட்டு வெடிகுண்டுகள்
ரவுடிகளிடம் இருந்து 1 துப்பாக்கி, 10 தோட்டாக்கள், 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 பட்டாக்கத்திகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல் துறையினர் இவர்கள் மீது சந்தேகமாக இருந்த வழக்குகளை தீவிரமாக விசாரித்து வந்தனர். சென்னையில் காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது ரவுடிகள் வழுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.