பேனருக்கு விதிக்கப்பட்ட தடை... புத்தொளி பெறும் சுவர் விளம்பரங்கள்
சென்னை: பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், தமிழகத்தில் மீண்டும் சுவர் விளம்பரங்களுக்கு மோகம் கூடியுள்ளன.
ஒரு காலத்தில் குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல், சினிமா, உள்ளிட்ட அனைத்துத் துறை விளம்பரங்களும் சுவர் ஓவியங்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கால ஓட்டத்தில் புதிது புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களால் பிளக்ஸ் பேனர்கள் எனும் விளம்பரத் தட்டிகள் அச்சடிக்கப்பட்டன.

மாற்று விளம்பரம்
பொதுவிடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அரசியல்வாதிகளும், விளம்பர நிறுவனத்தினரும் மாற்று முறையில் விளம்பரம் செய்யும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களை வாடகைக்கு பிடித்து அதில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியை தொடங்கியுள்ளனர்.

கூடுதல் செலவு
பிளக்ஸ் பேனருக்கு விதிக்கப்பட்ட தடை யாருக்கு கவலை தருகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கு அது மிகுந்த கவலையையும், செலவையும் தருகிறது. ரூ.1,000 இருந்தால் போதும் பிளக்ஸ் பேனரை அரைமணி நேரத்தில் அடித்து அதை கட்டிவிடுவார்கள். இப்போது சுவர் விளம்பரம் என வரும்போது சட்டை பாக்கெட்டில் இருந்து கூடுதலாக சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பிறந்தநாள்
மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக சென்னை, கோவை, ஆகிய நகரங்களில் இப்போதே அதிமுகவினர் முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளனர். இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ம் தேதி வருவதால், சென்னையின் பல்வேறு இடங்களில் சேகர்பாபு, மா.சுப்ரமணியம் ஆகியோர் பல சுவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டனர்.

சுவர் ஓவியர்கள்
பிளக்ஸ் வந்தது முதல் சுவர் ஓவியர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்றம் செய்த நல்ல காரியத்தால் அவர்களின் வாழ்க்கை மீண்டும் புத்தொளி பெறத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications