ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீங்கியது.. வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் கிருஷ்ணசாமி
Recommended Video

சென்னை: ஒட்டப்பிடாரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை அவர் திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீங்கியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜிடம் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்றார்.

இதனால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதனால் ஒட்டப்பிடாரத்துக்கு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் எதிர்க்கட்சிகள் இந்த தொகுதிக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரினார். இதையடுத்து கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனால் ஒட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த இருந்த தடை நீங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications