என் மனைவி தான் எனக்கு எல்லாம்! அவர் சொல்பேச்சை மீறமாட்டேன்! அமைச்சர் எ.வ.வேலு ஓபன் டாக்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்களை வாழ்த்தி பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தனது மனைவி பேச்சை மீறி தாம் எதுவும் செய்யமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
மனைவி பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்துவதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அமைச்சர் வேலு பேசியிருக்கிறார்.
புது மண தம்பதிக்கு புத்திமதி கூறும் வகையில் நகைச்சுவையாக இந்தக் கருத்தை விழா மேடையில் பதிவு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.

திருமண விழா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறவினரான ஜெயந்தி -சரவணன் தம்பதியின் மகன் திருமண விழா சென்னையில் இன்று காலை நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். அந்த வகையில் புதுமண தம்பதிகளுக்கு அறிவுரை கூறும் விதமாக பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும் எனக் கூறினார்.

மனைவி பேச்சு
தாம் அப்படித்தான் வாழ்ந்து வருவதாகவும் இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமானால், தமது மனைவி பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டேன் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்தப் பேச்சை கேட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட அந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். யார் தனது மனைவி பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்துகிறாரோ அவரது வாழ்க்கை தான் சிறப்பாக இருக்கும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தவறு இல்லை
மனைவி பேச்சைக் கேட்டு நடப்பதை சிலர் கவுரவ குறைச்சலாக கருதுகிறார்கள் என்றும் மனைவி பேச்சை கேட்டு நடப்பதில் தன்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை எனவும் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திருமண அரங்கில் இருந்த பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்ததை காண முடிந்தது. இதனிடையே புதிதாக மண விழா காணும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திருமண விழா கூடம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லம் திருமண விழா கூடமாகவே மாறிவிட்டதாகவும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் முதல்வர் வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications