ரசிகர்களை ரஜினிகாந்த் கட்டுப்படுத்த முடியாது.. தமிழருவி மணியன் அதிரடி.. வாய்ஸுக்கு சான்ஸே இல்லை!
சென்னை: ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களை ரஜினி கட்டுப்படுத்த முடியாது என்று, காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, டிசம்பர் இறுதியில் ரஜினிகாந்த் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3ம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி உடல்நிலை மோசமானதை காரணம் காட்டி திடீரென இந்த முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில்தான் கோபமடைந்த ரசிகர்கள், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரஜினிகாந்த் அறிக்கை
எனவே, ரஜினிகாந்த், தனது முடிவை மாற்றிக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இன்று காலை ரஜினி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போராட்டம், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன், நான் என் முடிவை கூறிவிட்டேன்.
தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியதுக்கு வர வேண்டுமென்று யாகும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேதும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியன்
இந்த நிலையில்தான், ரஜினிகாந்த்தின் துவங்கப்படாத கட்சியின் சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டவரும், காந்திய மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவருமான தமிழருவி மணியன் இது தொடர்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தன்னுடைய உயிர் குறித்து ரஜினி கவலைப்படவில்லை. பாதி வழியில் உடல்நிலைக்கு பிரச்சினை என்றால், தன்னை நம்பி வருவோர் நிலைமை என்னவாகும் என்று யோசித்த நிலையில்தான், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி முடிவு செய்துள்ளார்.

மன உளைச்சல்
அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி கூறிய பிறகும், கடும் மன உளைச்சலில்தான் இருக்கிறார். இரவு அதிக நேரம் தூங்காமல் இருக்கிறார். உறங்க முடியாத நிலையில்தான் அவர் இருந்துள்ளார். எனவே ரசிகர்கள், ரஜினிகாந்த்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று அவர் சார்பாக நானும் வேண்டிக்கொள்கிறேன். ரஜினி பல்லாண்டு காலம் வாழ வேண்டும், பல்வேறு தளங்கள் வாயிலாக அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது
எந்த அழுத்தத்திற்கும் ரஜினி ஆட்படக் கூடியவர் கிடையாது. ரசிகர்களை அவர் கட்டுப்படுத்த முடியாது. அவர் மீது எல்லையற்ற அன்பு செய்யக் கூடியவர்கள். கடவுள் நிலையில் வைத்து பூஜிக்க கூடியவர்கள். அவர்கள் இதை தாங்கிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். எப்படியாவது அவரை வைத்து அரசிய்ல மாற்றம் செய்துவிட முடியாதா என ரசிகர்கள் இறுதி முயற்சி எடுத்தனர். யாருடைய நெருக்கடியிலும் ரசிகர்கள் போராடவில்லை. தன்னெழுச்சியான போராட்டம் அதுவாகும்.

ரஜினி வாய்ஸ்
என்னைப் பொறுத்தளவில், தேர்தலின்போது, எந்த கட்சிக்கும், அமைப்புக்கும், ரஜினிகாந்த் வாய்ஸ் தரமாட்டார். ஏனென்றால் ஒரு தரப்புக்கு ஆதரவு அளித்தால், மற்றவர்கள் கசப்புக்கு அவர் இடம்தருவார். ஒட்டுமொத்த தமிழக மக்களை, ஜாதி, மதம், இனம் கடந்து, அன்பினால் அரவணைக்கும் மனம் உடையவர் ரஜினி. எனவே தனிப்பட்ட ஒரு அமைப்புக்கு வாய்ஸ் கொடுக்க மாட்டார். அவரை நன்றாக அறிந்த நிலையில்தான் நான் இதைச் சொல்கிறேன். இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications