ராஜ்யசபா தேர்தல்- கடும் அதிருப்தியில் காங். - திமுகவுக்கு 3வது எம்.பி. கிடைப்பதில் சிக்கலா?
சென்னை: ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்களை திமுக விரைவாக அறிவித்ததில் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். இதனால் திமுகவுக்கு 3-வது எம்.பி. சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போதைய தமிழக சட்டசபையில் திமுக கூட்டணிக்கு 3 எம்.பி.க்களும் அதிமுகவுக்கு 3 எம்.பி.க்களும் கிடைப்பது உறுதி.
இந்த நிலையில் திமுக யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென 3 ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்களை அறிவித்தது. திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டனர். திமுகவின் இந்த திடீர் அறிவிப்பால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.
திமுகவின் "மூன்று முடிச்சு".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி!
திமுக பிடிவாதம்
கடந்த ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இதற்காக திமுகவின் ஆதரவையும் கேட்டது காங்கிரஸ். ஆனால் திமுக மன்மோகன்சிங்கை எம்.பி.யாக்க திட்டவட்டமாக மறுத்தது. தற்போதைய ராஜ்யசபா தேர்தலிலும் எங்கே சீட் கேட்டுவிடுவோமோ என நினைத்தே திமுக முதலிலேயே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது என்பது காங்கிரஸாரின் குமுறல்.
காங்கிரஸ் ஆலோசனை
ஆனால் கடந்த முறை போல இந்த முறை அமைதியாக இருக்க முடியாது என்கின்றனர் காங்கிரஸார். இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவை இன்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திக்க உள்ளாராம். மேலும் வரும் 7-ந் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாம் காங்கிரஸ் கட்சி.
திமுக கூட்டணி நிலவரம்
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே திமுகவுக்கு 3-வது ராஜ்யசபா எம்.பி. எளிதாக கிடைக்குமா? போராடி பெற வேண்டுமா? என்பதும் தெரியவரும். ஏனெனில் சட்டசபையில் திமுகவுக்கு 98; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1; காங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுகவின் 3 ராஜ்யசபா எம்.பிக்கள் எளிதாக வெல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து மொத்தம் 102 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்.
3-வது எம்.பிக்கு சிக்கல்?
காங்கிரஸ் முறுக்கிக் கொண்டு நின்றாலோ தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலோ திமுகவின் 3-வது எம்.பி. எளிதாக வென்றுவிட முடியாது. இதனையும் கருத்தில் கொண்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கடைசிநேரத்திலாவது ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றுவிடுவதில் முனைப்பாக இருக்கிறதாம் காங்கிரஸ். இதற்கான தீவிர ஆலோசனைகள் சத்தியமூர்த்தி பவனில் இப்போதே தொடங்கிவிட்டனவாம்.