ராமஜெயம் வழக்கு : உண்மை கண்டறியும் சோதனை இன்று நிறைவு.. ‘கொலையாளி யார்’.. மர்ம முடிச்சு அவிழுமா?
சென்னை : ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் உண்மை கண்டறியும் சோதனை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து 12 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் தடயவியல் துறை நிபுணர்கள் வழங்குவார்கள் எனத் தெரிகிறது. அதன்பிறகே 10 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கின் மர்ம முடிச்சு அவிழுமா என்பது தெரியவரும்.
ராமஜெயம் கொலை குறித்து சிபிசிஐடி, சிபிஐ என்று மாறி மாறி விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடந்து வருகிறது.
இதில், 12 நபர்கள் சந்தேக நபர்களாக விசாரணை வளையத்திற்குள் வந்த நிலையில், அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை செய்யும் சிபிசிஐடி: எப்படி நடத்தப்படும்?
ராமஜெயம் கொலை
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29-ஆம் தேதி நடைபயிற்சி சென்றபோது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் கடந்தாலும், குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இந்தக் கொலை வழக்கை தற்போது, சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். அதற்கான அனுமதியை திருச்சி நீதிமன்றம் வழங்கியது. அதைத்தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
12 கேள்விகள்
முதல் நாளில், சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன் (49), தினேஷ்குமார் (38), மயிலாடுதுறை சத்யராஜ் (40) ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராமஜெயம் கொலை தொடர்பாக அவர்களிடம் தலா 12 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இதையடுத்து 19ஆம் தேதி செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்திரன் ஆகியோரிடமும், நேற்று 20ஆம் தேதி சாமி ரவி, மாரிமுத்து, சிவா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
மர்ம முடிச்சு அவிழுமா
பின்னர் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிசிஐடி பிரிவு போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே இந்த வழக்கில் துப்பு துலங்குமா என்பது தெரியவரும் என சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதற்கு விடை கிடைக்குமா என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.