தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் - சர்ச்சைக்கு பிறகு வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழக அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என். சாமி தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்.
எழுந்து நிற்காத ஆர்பிஐ அதிகாரிகள்
இதை பார்த்த நிருபர் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது என்றனர். தமிழகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது என அந்த நிருபர் கூறிய நிலையில் இனி மேல் பார்த்துக் கொள்கிறோம் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பதில் அளித்ததாக தெரிகிறது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் வங்கிகள் என்பது சமூகத்திற்கு மிக முக்கியமானவை அதிலும் ஆர்பிஐ, நாணய கொள்கைகளை வகுக்கிறது. வங்கிகளை ஒழுங்குமுறைப்படுத்துகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சில விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. அவ்வாறிருக்கும் போது இந்த வீடியோ வெளியானது மன வேதனையை அளிக்கிறது என பிடிஆர் தெரிவித்திருந்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை
அது போல் அனைத்து கட்சியினரும் ஆர்பிஐ அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைனில் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அது போல் சென்னை பாரிமுனையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தை தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தியிருந்தனர்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வருத்தம்
தமிழக பாஜகவினரும் ஆர்பிஐ அதிகாரியின் செயலை கண்டித்தனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து நிதியமைச்சரும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இன்று தலைமைச் செயலகத்தில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என் சாமி நேரில் சந்தித்தார். அப்போது குடியரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு வருத்தம் தெரிவித்தார். இன்று மாலை ரிசர்வ் வங்கி சார்பில் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.