16 ஸ்கேனர்கள்.. கார்டை காட்டினால் தான் கதவு திறக்கும்- பொதுக்குழுவில் ஹைடெக்காக இறங்கிய ஈபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பம் கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
ஆர்.எஃப்.ஐ.டி அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்து உள்ளே அனுமதிப்பதற்காக பொதுக்குழு நுழைவாயிலில் 16 நவீன ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் டிஜிட்டல் வருகைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் பொதுக்குழு அரங்கில் நிறைவடைந்துள்ளன.
இறங்கிய அந்த ஊர் புள்ளிகள்.. எடப்பாடி வீட்டுக்கு நேரா போய் அட்டென்டன்ஸ்.. ஈபிஎஸ் கொடுத்த மெசேஜ்!?
பொதுக்குழு பரபர
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு முன்வைத்த காரசாரமான வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டார். நாளை காலை 9:15 மணிக்கு பொதுக்குழு கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கால் மணி நேரம் முன்னதாக தீர்ப்பு வரவுள்ளது. தீர்ப்பு தமக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஈபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளனர்.
முழுவீச்சில் ஏற்பாடுகள்
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் பாதியில் கலைந்த நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்கியே தீருவது என்ற தீர்மானத்தோடு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பொதுக்குழு கூட்டத்தில் நுழைந்து பிரச்சினையை எழுப்பி விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் கவனமாக உள்ளனர்.
டிஜிட்டல் பாதுகாப்பு
பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பொதுக்குழுவில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பு ஒருபுறம் இருக்க, டிஜிட்டல் பாதுகாப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர் ஈபிஎஸ் தரப்பினர்.
ஹைடெக் வசதிகள்
பொதுக்குழு கூடத்துக்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களின் வருகையை தானியங்கி முறையில் பதிவு செய்வதற்கான அமைப்புகள் பொதுக்குழு அரங்க நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டைகளை ஸ்கேன் செய்ய அதிநவீன நுழைவாயில், பொதுக்குழு அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
16 கேட்வே
பொதுக்குழு கூட்ட அரங்கில் மொத்தம் 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பம் கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை இந்த டிஜிட்டல் நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து அது உறுதி செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு யாரும் வர முடியாது
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருப்பது போன்ற இந்த நவீன நுழைவாயில் வசதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத யாரும் கூட்ட அரங்கிற்குள் வந்துவிடக் கூடாது என்பதற்கான ஏற்பாடாம். நாளை எந்தவித அமளி துமளியும் இல்லாமல் அதிமுக தலைமைக்கு தான் வர வேண்டும் என ஈபிஎஸ் உத்தரவிட்டதன் பேரில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.