ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ‘ஸ்கெட்ச்’ போட்ட தகர கொட்டாய் அருகிலேயே உயிரை விட்ட ரவுடி! அதிகாலை நடந்தது என்ன?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியிருந்த ரவுடி திருவேங்கடம் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்ட தகர கொட்டாய் அருகிலேயே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் திருவேங்கடம்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

திருவேங்கடத்திடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகளை போலீசார் கண்டறிந்ததன் அடிப்படையில், புலன் விசாரணைக்காக தடயங்களை சேகரிப்பதற்காகவும், ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் திருவேங்கடத்தை மாதவரம் பகுதிக்கு இன்று அதிகாலையில் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும் போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை தேடியபோது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டாய் ஒன்றில் திருவேங்கடம் பதுங்கி இருந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் அவர் சரணடைய மறுத்து தகர கொட்டாய் அருகே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக அவரை சுட்டுள்ளனர். இதில் மார்பு மற்றும் வயிற்றில் குண்டுகள் பட்டு சம்பவ இடத்திலையே ரவுடி திருவேங்கடம் உயிரிழந்துள்ளார்.
ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று பதுங்கியிருந்த தகர கொட்டாயில்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல 'ஸ்கெட்ச்' போட்ட இடத்திலேயே ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கி மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை யார் தயாரித்தது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியான அருள் என்பவரின் நெருங்கிய நண்பர். திருவேங்கடம் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பாக அவரை தொடர்ந்து வேவு பார்த்தது, எந்த நேரத்தில் எப்படி கொலை செய்யலாம் என திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் மீது முதல் வெட்டு வெட்டியவர் திருவேங்கடம் தான் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருவேங்கடம் கடந்த 2014-ல் குன்றத்தூரில் நடந்த கொலை, 2015ல் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் நடந்த திருவள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு கொலை ஆகிய வழக்குகளிலும் முக்கிய குற்றவாளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் இன்று என்கவுன்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய தகரா கோட்டை அருகே திருவேங்கடம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications