கர்நாடக பறவைய விடுங்க.. தமிழக அரசின் பள்ளி பாட புத்தகத்திலும் சாவர்க்கர்! எது வரலாற்று ஆசிரியரா?
சென்னை: கர்நாடக பள்ளி பாடபுத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கர் குறித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு சமர்ச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சாவர்க்கர் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.
இந்த புதிய குழு, மொழி மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தந்தை பெரியார், நாராயண குரு உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள், முற்போக்கு கருத்து கொண்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் அகற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆர்.எஸ்.எஸ். கல்வி
அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவர், சாவர்க்கர் குறித்த பாடங்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.
சாவர்க்கர் சர்ச்சை
இந்த நிலையில் கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு அரசு பாடபுத்தகம்
இந்த செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதனை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சமச்சீர் கல்வியின் கீழ் தயாரித்து இருக்கும் 8 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் சாவர்க்கர் குறித்த கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன.
வரலாற்று ஆசிரியர் சாவர்க்கர்
1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான திப்பு சுல்தானின் மகன் பதே ஹைதர், வேலூரின் 23 வது படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் செய்த வேலூர் கலகம் குறித்து அந்த பாடபுத்தகத்தின் 46 வது பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதில், "1806ல் நடந்த வேலூர் கலகத்தை 1857 ல் நடைபெற்ற 'முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னேடி' என வி.டி.சவார்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.