திமுக ஆட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். வழக்கால் நெருக்கடி.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் செப்டம்பர் 22-ந் தேதிக்குள் ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் சென்னை உயர்ந்ரீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக பாஜக வேரூன்ற முடியாமல் தத்தளிக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் சில இடங்களையாவது கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முழு வீச்சில் களமிறங்கி உள்ளது.
அண்மையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்க நிர்வாகிகள் தமிழகத்தில் ரகசிய ஆலோசனைகள் கூட்டத்தை நடத்தி இருந்தனர். இந்தக் கூட்டத்தில் பாஜகவை வேர்பிடிக்க வைப்பதற்கான வியூகங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த அனுமதி கோரும் மனுக்கள் மீது எந்த முடிவையும் போலீசார் தெரிவிக்கவில்லை. அதாவது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பயங்கரவாத தொடர்பு.. தமிழக வாரிசு அண்ணாமலை.. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட ஒன்பது இடங்களைச் சேர்ந்த ஆர்.எஸ் எஸ். நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், அணிவகுப்பு ஊரவலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் வரும் 22ம் தேதி முடிவு எடுத்து தெரிவிக்கப்படும் என கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய னுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.