6ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி பாடம்.. வெடித்த சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை எடுத்த சூப்பர் முடிவு!
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டு பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் உள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி இருப்பது சர்ச்சையைகிளப்பியது. இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
தமிழகத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தில் இளம்வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் பலர் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து கடனில் சிக்குகின்றனர்.
இருப்பினும் சூதாட்டத்தில் இருந்து விடுபட முடியாத நபர்கள் தொடர்ந்து கடன் வாங்கி மீளமுடியாத சிக்கலில் சிக்கிவிடுகின்றனர். அதன்பிறகு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்யும் சம்பவங்களும் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
Fact check: சரத்துக்கு பதிலாக ஆளுநர் முகம்.. போட்டோஷாப்! ஆன்லைன் ரம்மி விளம்பரம் - உண்மை என்ன?
தொடரும் தற்கொலை
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு தென்காரி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வசித்து கொண்டு வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் மாண்டல் என்பவரின் மனைவி ஸ்ரீதனா மாஞ்சி ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்தார். இதேபோல் சென்னை மணலி கால் தோட்டம் பகுதியை சேர்ந்த 26 வயது நிரம்பிய ஆட்டோ டிரைவர் பார்த்திபன் என்பவரும் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா
இத்தகைய தொடர் தற்கொலையால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவியுடன் ஒப்புதல் வழங்கினார். மேலும் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவுக்கு ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நேற்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து கோரிக்கை வைத்தார். விரைவில் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கான நிரந்தர தடை விதிக்கும் சட்டம் தமிழகத்தில் அமலாகும்.
புத்தகத்தில் ரம்மி பாடம்
இந்நிலையில் தான் தமிழகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் ரம்மி தொடர்பான பாடம் இடம்பெற்றுள்ளது. அதாவது 6ம் வகுப்பு மூன்றாம் பருவத்துக்கான கணித பாடத்தில் ரம்மி விளையாடுவது பற்றிய குறிப்புகளுடன் பாடம் உள்ளது. இதனை நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு தற்போது பள்ளி கல்வித்துறை செவிசாய்த்துள்ளது.
அடுத்த ஆண்டு நீக்கம்
அதன்படி பள்ளி மாணவர்களுக்கான 6ம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி தொடர்பான குறிப்புகள் நீக்கம் செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடம் நடப்பு கல்வியாண்டில் மட்டும் இருக்கும். அடுத்த கல்வியாண்டில் இருந்து ரம்மி தொடர்பான பாடம் இடம்பெறாது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.