நான் என்ன டாக்டரா? ஜெயலலிதா சிகிச்சை பற்றி மருத்துவர்களே முடிவு செய்தனர்.. சசிகலா பரபர கருத்து!
சென்னை : ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றுமே தடையாக இருந்ததில்லை, ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். விசாரணை நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா, சசிகலா உறவினர் சிவகுமார், அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சுயநலத்திற்காக ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மற்றும் வெளிநாடு அழைத்துச் செல்ல சசிகலா தடையாக இருந்தார் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா, சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதை தவிற வேறு முடிவுக்கு வர முடியவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சசிகலா மீது குற்றச்சாட்டு
போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மர்மமாக வைக்கப்பட்டுள்ளது. ஜெ.வை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர் ரிச்சர்ட் பீலோ பரிந்துரை செய்த நிலையில் அதற்கு சசிகலா தடையாக இருந்துள்ளார். ஜெ சிகிச்சையில் இருந்தபோது சசிகலாவின் உறவினர்கள் அப்பல்லோ மருத்துவமனையை ஆக்கிரமித்திருந்தனர். 2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்தனர். ஆனாலும் அவர்களுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை, இதனால் சுயநலத்திற்காக ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய சசிகலா தடையாக இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நான் டாக்டர் இல்லை
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை என சசிகலா அறிக்கை விடுத்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கருத்துகளை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவப் படிப்புகளை நான் படித்தது கிடையாது.

என் நோக்கமே இதுதான்
என்ன பரிசோதனை, எந்தெந்த மருந்துகள் தர வேண்டும் என்று மருத்துவக் குழுவினரே முடிவு செய்தனர். ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை தரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. வெளிநாட்டுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். விசாரணை நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

என் மீது பழி
ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, விசாரணை ஆணைய அறிக்கையை அரசியலாக்கி விட்டார்கள். ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்குவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள், என் மீது பழி போடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேறு வழியை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஜெயலலிதாவின் மரணத்தை சர்சையாக்கியது வேதனை தருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications