நூதன திருட்டு எதிரொலி : நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் பணம் எடுக்க தடை
எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை அடுத்து பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் லட்சக்கணக்கான ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மின் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அதில் பணம் எடுக்க நாடு முழுவதும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னையில் உள்ள வளசரவாக்கம், தரமணி, வேளச்சேரி, விருகம்பாக்கம், வடபழனி, பெரியமேடு, கீழ்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் தொழில்நுட்ப ரீதியாக கைவரிசை காட்டியுள்ள கொள்ளையர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்த இவர்கள் சென்னை முழுவதும் சுற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்கள் நூதன திருட்டு
டெபாசிட் இயந்திரத்தில் பணம் வெளியே வந்த பின் சென்சாரில் கையை வைத்து மறைத்துவிட்டால் 20 நொடியில் அந்த பணம் அதே வங்கி கணக்குக்கே திரும்பி விடுகிறது. அதை அறிந்துகொண்ட கொள்ளையர்கள் பல்வேறு ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொள்ளை
தமிழகத்தைப் போல் வேறு மாநிலங்களிலும் நூதன முறையில் கடந்த சில வாரங்களில் ஏடிஎம் திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் மட்டும் ரூ.48 லட்சம் திருட்டு போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே டெபிட் கார்டு மூலம் பல முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது.

தனிப்படை அமைப்பு
கடந்த 3 நாட்களில் பல்வேறு இடங்களில் 7 ஏடிஎம்களில் இருந்து புகார் வந்துள்ளது. ஏடிஎம் கார்டு கொள்ளையடிக்க எந்த கார்டு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கூடுதல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றுவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்
எஸ்பிஐ ஏடிஎம்மின் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அதில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் திருடிய கும்பல் ஹரியானா தப்பி சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களைத் தேடி காவல்துறையினர் ஹரியானாவிற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications