Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

28+1 .. முடிவுக்கு வந்த இழுபறி! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்து ஆகியுள்ளது. காங்கிரசுக்கு வரும் 2026 சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் அறிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் பேசியது பரபரப்பை உருவாக்கியது. இன்னும் சில தலைவர்கள் தவெக தரப்பிலும் பேசி வந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

DMK Congress Alliance Locked Congress to Contest 28 1 Seats in DMK-Led Front for TN Polls

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும், இறுதி முடிவு எட்டப்படாததால் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. மேலும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது தவெக பக்கம் செல்லுமா என்று பரபரப்பும் நிலவியது.

காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் 36 தொகுதிகளும், 2 ராஜ்ய சபா சீட்டும் கேட்டு வருவதாக சொல்லப்பட்டது. அதே நேரத்தில், திமுக கடந்த முறை கொடுத்த 25 தொகுதிகளை அளிப்பதாக தொடர்ந்து சொல்லி வந்தது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுக்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது கிட்டத்திட்ட ஆரம்பித்த இடத்திலேயே நின்றது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதியுடன் நிறைவடைவதால் 3 ஆம் தேதிக்குள் முடிவைச் சொல்லுங்கள் என திமுக தரப்பில் கெடு விதிக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​பட்​ட​தால், கூட்ட​ணிக்குள் மோதல் முற்றத் தொடங்​கியது.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று மதியம் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக எம்.பி. கனிமொழியும் உடனிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக 29 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்தப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும், திமுக தலைவருடனான பேச்சுவார்த்தை குறித்து சிதம்பரம் ராகுல் காந்தியிடம் விவரங்களை தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டது.

செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது, முடிந்த பிறகு உங்களிடம் அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "அவர்கள் கேட்பது வேறு, நாம் சொல்வது வேறு. திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே எங்கள் தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) விரும்புவார். காங்கிரஸார் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்" என்றார்.

முன்னதாக, கே.சி.வேணுகோபால் மற்றும் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, திமுக 25 இடங்களைத்தான் தருகிறது, நாம் என்ன முடிவு எடுக்கலாம்? எனக் கேட்டதற்கு, எம்.எல்.ஏ-க்கள் தரப்பில், திமுக உடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய்க்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சொந்தக் கட்சிக்கே பிரசாரத்திற்கு வராத அவர், புதுச்சேரி மற்றும் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்காகாக வருவாரா என்பது சந்தேகமே. எனவே, தவெக-வுடன் கைகோர்ப்பது இப்போதைக்குச் சரியாக இருக்காது. முதல்வரிடம் பேசி கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்பதே அரசியல் ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும். இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

எனவே, காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறும் முடிவை எடுக்காது, கடைசி கட்டத்தில் திமுகவின் எண்ணிக்கைக்கு ஒப்புக்கொள்ளும் எனத் தகவல் வெளியானது. அதன்படியே தற்போது திமுக காங்கிரஸ் இடையே இன்று இரவு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. 'இதில் காங்கிரசுக்கு வரும் 2026 சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் அறிவித்தார். கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+