பாரிவேந்தரின் எம்.பி பதவியை பறிக்க வேண்டும்.. கோபம் ஏற்படுத்திய பேச்சு..‘தலை’ கைக்கு போன புகார்!
சென்னை : திமுகவின் சின்னத்தில் நின்று எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், திமுகவையே விமர்சித்துப் பேசி வருவது திமுக தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தலைமைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாகவே, பாஜகவுக்கு இணக்கமாகவும், திமுகவுக்கு எதிராகவும் நடந்துகொண்டு வரும் பாரிவேந்தர் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசியபோது திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது பற்றி கவலையோடு பேசியிருந்தார்.
பாரிவேந்தரின் இந்தப் பேச்சு திமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திமுக சின்னத்தில் நின்று எம்.பியாகிவிட்டு, அதனை மறந்து, இப்போது அவர் இப்படி பேசுவதை திமுக சீனியர்களும் ரசிக்கவில்லை.
இந்நிலையில், தேசிய முன்னேற்ற கழகத்தினர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று, பாரிவேந்தரின் எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர்.
சரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன?.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா?
பாரிவேந்தர்
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சைமுத்து, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பாரிவேந்தர் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார்.
பாஜகவை புகழ்ந்த பச்சைமுத்து
பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வரும் பாரிவேந்தர், மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் பாராட்டிப் பேசியிருந்தார். மேலும் பாஜக கூட்டணியில் சேர முயற்சித்தோம், ஆனால், முடியவில்லை என்பதால் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திமுக கூட்டணியில் இப்போது இல்லை என்றாலும், எம்.பி பதவியில் இருக்கிறேன் எனப் பேசியிருந்தார் பாரிவேந்தர்.
அமைச்சர் பங்கேற்ற விழாவில்
இந்நிலையில் தான் கடந்த வாரம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.சத்யநாத உடையார் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவை திமுக அமைச்சர் கே.என்.நேரு தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விழாவில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் பங்கேற்றார்.
எம்.பி பதவி சும்மா
இந்த விழாவில் பேசிய பாரிவேந்தர், சாதி இல்லை என்று சொல்லும் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த சாதியை சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். நான் 2014 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். பின்னர் மாற்றுக் கூட்டணியில் 2.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி தான்.
போகாத இடத்திற்கு போய்விட்டேனே
இதற்காக நான் போகாத இடத்திற்கு போயிருக்க வேண்டாம். நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். அவசரப்பட்டு விட்டேன் என ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன் என்று பேசினார். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர், திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து கவலையோடு பேசியது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைமைக்கு பறந்த புகார்
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று, உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், திமுகவை தரம் தாழ்த்தி விமர்சித்து வருகிறார் என்றும் அவரது எம்.பி. பதவியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேசிய முன்னேற்றக் கழகத்தினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அதனை திமுக தலைவரிடம் சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பதவியை பறிக்க வேண்டும்
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா, திமுக சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவிடமிருந்து எம்.பி பதவியை பறிக்க, உரிய நடவடிக்கையை திமுக மேற்கொள்ள வேண்டும் என புகார் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.