உயர்ஜாதி இடஒதுக்கீடு! கே.எஸ்.அழகிரி “அப்டி”.. செல்வப்பெருந்தகை “இப்டி”! குழப்பத்தில் கதர்கள்
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.
உயர்சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைமை வரவேற்றது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.
அதில், "காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவில் ஐந்தாயிரம் ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை.

ஜவஹர்லால் நேரு
ஒரு சிலரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்ற நடைமுறையை அந்தக்காலத்தில் நீதி என்று சொல்லி அதனை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள்.

மன்மோகன் சிங் ஆட்சி
சுதந்திரம் கிடைத்து தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இன்றைய நடைமுறையை பின்பற்றி இன்றைக்கு பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது.

சமூக நீதியல்ல
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும்.

சமூக நீதி
ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது." என்று கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்
இந்த நிலையில் உயர்சாதியினருக்கு 10 சதவீதம் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டார். இதில் 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என்ற முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

செல்வப்பெருந்தகை பேட்டி
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "காங்கிரஸ் கட்சியின் சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தேசிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸின் பார்வையில் வேறு வகையில் இருந்தாலும், தமிழ்நாட்டில் சமூக நீதி கொள்கையை ஆதரிக்கிறோம். தமிழ் மக்களின் நலனுக்காக முதலமைச்சர் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications