கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்ட இடிப்பு இல்லையா மிஸ்டர் வைகோ? கேட்பது ஹெச். ராஜா
சென்னை: கள்ளத்தனமாக அந்நிய நாட்டுக்கு (இலங்கைக்கு) சென்றது அரசியல் சட்டத்தை இடித்ததற்கு சமம் இல்லையா? என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோவுக்கு பாஜகவின் மாஜி தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட 32 இந்துத்துவா தலைவர்களை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. லக்னோ நீதிமன்றத்தின் தீர்ப்பில், சிபிஐயின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டிருந்தது.
பாஜகவில் ஆளே இல்லையா.. முருகனே வாய் விட்டு குஷ்புவை கூப்பிடுகிறாரே.. ரொம்ப திணறுதே?!
சிபிஐ குறித்து ஸ்டாலின் விமர்சனம்
இதனை வைத்து இந்த வழக்கில் சிபிஐ மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம்! அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த #BabriDemolitionCase-ல் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய #CBI பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்! என கூறியிருந்தார்.
கமல், வைகோ காட்டம்
கமல்ஹாசன் தமது ட்விட்டர் பதிவில், நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என விமர்சித்திருந்தார். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், இந்த தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமம் என விமர்சித்திருந்தார்.
ஸ்டாலினுக்கு ஹெச். ராஜா பதில்
இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலினின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக மாஜி தேசிய செயலாளர் ஹெச். ராஜா, யார் யாருடைய கூண்டுக்கிளியாக செயல்பட்டார் என்று அக்டோபர் 5 க்கு பிறகு தெரியவரும் என 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையை முன்வைத்து விமர்சித்திருந்தார். இது ட்விட்டர் பக்கங்களில் பேசுபொருளானது.
வைகோ மீது ஹெச் ராஜா பாய்ச்சல்
இதேபோல் வைகோவின் நீதியின் அரண்களை இடித்தற்கு சமம் என்பதற்கும் ஹெச். ராஜா பதில் கொடுத்திருக்கிறார். அதில், ஆமாம் எந்த ஆவணங்களும் இன்றி கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்டத்தை இடித்ததற்கு சமம் இல்லையா? என கேள்வி கேட்டுள்ளார். வைகோ, திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த போது இலங்கைக்கு சென்று வன்னிக்காடுகளில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்ததை ஹெச். ராஜா குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.