அத்தனை கட்சிகளுடனும் வம்பு... விஜயபிரபாகரன் எனும் பேச்சாளரை வெச்சுகிட்டு... அய்யோ பரிதாப தேமுதிக!
சென்னை: சினிமாவில் கர்ஜித்தபடி புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே கேப்டன் விஜயகாந்த் பேசுவது திரையரங்குகளை அதிரவைக்கும். அரசியல் மேடைகளிலும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். இன்று தேமுதிக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் வம்பு பேச்சுகளால் பரிதாபப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறது.
சினிமாவில் பேசுவதைப் போலவே அரசியல் கட்சியை தொடங்கி பொதுமேடைகளில் பின்னி பெடலெடுத்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக அவரது குரல், உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஓரிரண்டு வார்த்தைகள் கூட சரியாக உச்சரிக்க முடியாத அளவுக்கு விஜயகாந்த் குரல் பாதிக்கப்பட்டது. எத்தனையோ சிகிச்சைகள் எடுத்தும் எந்த பயனும் கிடைக்காத நிலைதான் தொடருகிறது.
குடும்ப ஆதிக்கம்
இந்த நிலையில்தான் தேமுதிகவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ், மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கை ஓங்கியது. இவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருக்க முடியாமல் கட்சியைவிட்டே பெரும்பாலான 2-ம் கட்ட தலைவர்கள் மாற்று கட்சிகளில் தஞ்சம் அடைந்துவிட்டனர்.
பேச்சுகளால் அதிருப்தி
இதனால் பிரேமலதா அண்ட் கோ கைகளில் முழுமையாக தேமுதிக வந்தது. இதன்பின்னர் இவர்கள் பேசுகிற பேச்சுகள் அத்தனையும் எகத்தாளமானது; ஏகடியமானது; எல்லோரையும் விட தாங்களே அறிவாளி என நினைத்து அழிச்சாட்டியமாக பேசுவது என அத்தனை பேரையும் அத்தனை தலைவர்களையும் முகம் சுளிக்க வைத்துவிட்டனர்.
கூட்டணி பிரச்சனைகள்
ஒவ்வொரு முறையும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை வாயாலே கெடுத்துக் கொண்ட வரலாறு இந்த குடும்பத்துக்கு மட்டுமே உண்டு. இந்த தேர்தலிலும் இந்த அவலம் நீடித்தது. அதைவிட இப்போது தேர்தல் களத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார். சுதீஷுக்கு கொரோனா தொற்று. அதனால் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேமுதிக பேச்சாளர் விஜயபிரபாகரன்
தேமுதிகவின் ஒற்றை நட்சத்திர பேச்சாளர் விஜயபிரபாகரன்தான். சும்மா இருக்கும் காலத்திலேயே வாய் கிழிய வம்படியாக பேசுவார். இப்போது ஒட்டுமொத்த தேமுதிக பிரசாரத்தையும் தோளில் சுமக்கிறாரே.. இந்த கனம் இருக்கிறதே அதுதான் அவரை ஒவ்வொரு கூட்டத்திலும் வம்பை விலைக்கு வாங்க சொல்லுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து நீங்க என்ன எம்ஜிஆரா? ஜெயலலிதாவா? என கேட்டவர் இந்த இளைஞர் விஜயபிரபாகரன்.
அமமுகவுடனும் வம்பு
இதனாலேயே அதிமுகவில் தேமுதிகவுக்கான கூட்டணிக்கான கதவுகள் மூடப்பட்டன. பின்னர் பரிதாபப்பட்டு அ.ம.மு.க. கதவுகள் திறக்கப்பட்டன. ஆனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத விஜயபிரபாகரன் இப்போது அ.ம.மு.க.தான் எங்களுடன் கூட்டணிக்கு வந்தது என மறுபடியும் முருங்கை மரம் ஏறி இருக்கிறார். இப்படியான அடாவடியான வம்படியான சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளால் ஏதோ அங்கும் இங்குமாக இருக்கும் 2% வாக்குகளையும் நோட்டாவுக்கு கீழே கொண்டு சேர்த்துவிடுவார் விஜயபிரபாகரன் என நொந்து போகின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.