பாலியல் வழக்கு : தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை: 'போக்சோ' உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கிட்டத்தட்ட 3மாதங்களுக்கு பிறகு 250 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றியவர் நாகராஜன் (வயது 59). இவர் 'சென்னை பிரைம்' என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான மைதானத்தில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் நாகராஜன் மீது அவரிடம் பயிற்சி பெற்ற 19 வயது வீராங்கனை,சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். அந்த 19 வயது மாணவி தனது மனுவில் பிசியோதெரபி பயிற்சி அளிப்பதாக கூறி பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 'போக்சோ' உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த மே 30ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகராஜன் மீது மேலும் பல வீராங்கனைகள் புகார் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது சென்னை போக்சோ நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட கைது செய்யப்பட்ட 3 மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் அவர் கோச்சாக இருந்த காலக்கட்டத்தில் அத்துமீறியதாக பெண்கள் அளித்த புகார்கள் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications