சைவத்திற்கும், வைணவத்திற்கும் நடந்த யுத்தத்தின் உருவகம்தான் ராமாயணம்.. திருமாவளவன் கருத்து!
சென்னை: ராஜராஜ சோழன் குறித்த விவாதங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது தொடர்ந்து மேலெழுந்து வந்திருக்கக்கூடிய நிலையில், இதன் தொடர்ச்சியாக வைணவம், சைவம் குறித்த விவாதங்களும் மேலெழுந்திருக்கின்றன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது இந்த விவாதம் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் பேசிய கருத்துக்களும் விவாதமாக ஆனது.
யார் இந்து என்றும்? இந்து சமயத்திற்குள் இருந்த முரண்பாடுகள் குறித்தும் சிலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் சைவம், வைணவ மோதல் ராமாயணம் எனக்கூறி, திருமாவளவன் எம்பி ட்வீட் செய்துள்ளார்.
கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் கிடையாது என்பது போல இருக்கு.. ராஜ ராஜ சோழன் இந்து தான்.. காங் தலைவர்!
சர்ச்சை
தமிழ்நாட்டில் இந்து சமயம் குறித்த சர்ச்சைகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. ராஜராஜ சோழன் குறித்து கடந்த 2020ல் தஞ்சையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டன. இந்த விஷயத்தில் ராஜராஜ சோழன் இந்து மன்னன் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்து மன்னன்
இந்த நிலையில்தான் பொன்னியின் செல்வன் படம் வந்த சூட்டோடு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "நம்முடைய அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்து அரசன் என்கிறார்கள்" என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் யார் இந்து என்றும், இந்து சமயத்திற்குள் இருந்த முரண்பாடுகள் குறித்தும் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
சைவம், வைணவம்
தமிழ்நாட்டில் சமண மற்றும் பௌத்த மதங்களின் ஆதிக்கம் இருந்த போதிலும் அவை நிறுவனமயமாக்கப்படவில்லை. பக்தி இலக்கியங்கள், அதனை தோற்றுவித்த சைவ மற்றும் வைணவ மதங்கள்தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள் என்று ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறியுள்ளார். ஆடையின்றி ஊருக்கு வெளியே இருந்த சமண துறவிகள் ஒருபுறமும், ஆடையுடன் இருந்தாலும் மக்களுடன் இல்லாமல் தனித்து இருந்த பௌத்த மதங்கள் மறுபுறமும் இருந்த நிலையில், மக்களுடன் கலந்து உருவானதுதான் சைவம் மற்றும் வைணவ மதங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்வீட்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் சைவ மற்றும் வைணவம் குறித்து டிவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "வைணவத்துக்கும் சைவத்துக்குமிடையிலான யுத்தத்தின் உருவகக் காப்பியமே ராமாயணம் எனவும் புரிந்து கொள்ளலாம். இராமன் வைணவத்தின் அடையாளம். இராவணன் சைவத்தின் அடையாளம். இராமன் தூயன். இராவணன் தீயன். இராமனுக்கு வெற்றி. இராவணனுக்கு அழிவு. அப்படியெனில், வைணவம் வென்றது. சைவம் வீழ்ந்தது." என்று கூறியுள்ளார்.
பதிலடி
அதேநேரம், ராணவனனை வதம் செய்த பாவம் நீங்க ராமர், ராமேஷ்வரத்தில் சிவனை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. திருமாவளவன் சைவத்தை, வைணவம் வீழ்த்தியதாக கூறுவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகளை நெட்டிசன்கள் மற்றும் வலதுசாரியினர் எழுப்பி வருகிறார்கள்.